Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம்: விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி

சட்டவிரோத சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாயிகள் சங்கத் தலைவர் பல்தேவ் சிங் சிர்சா விசாரணைக்கு ஆஜராக தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது.

வேளாண் சட்டங்களை வாபஸ்பெற கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அவர்களில் லோக் பலாய் இன்சாப்நலவாழ்வு சொசைட்டி தலைவர் பல்தேவ் சிங் சிர்சாவும் ஒருவர்.

இதற்கிடையில், நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல், மக்களிடம் வெறுப்புணர்வைத் தூண்டுதல், மத்திய அரசுக்கு எதிராக செயல்படுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில், ‘சீக்கியர்களுக்கு நீதி’ (எஸ்எப்ஜே) என்ற சட்டவிரோத அமைப்பின் தலைவர் குர்பட்வந்த் சிங் பன்னு செயல்படுவதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

எஸ்எப்ஜே அமைப்பின் நடவடிக்கைகள் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்தேவ் சிங் சிர்சாவுக்கு என்ஐஏ சம்மன் அனுப்பி உள்ளது. அதில், 17-ம்தேதி (இன்று) டெல்லியில் உள்ளஎன்ஐஏ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சிர்சா கூறும்போது, ‘‘விவசாயிகள்நடத்தும் போராட்டத்தை ஒடுக்கவே, எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூலம் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு முயற்சித்தது. இப்போது என்ஐஏ மூலம் ஒடுக்க நினைக்கிறது. விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் பலருக்கும் என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்’’ என்றார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடும்போது, ‘‘டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் தனிநாடு கோரும் அமைப்பினர் ஊடுருவி உள்ளதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன’’ என்றார்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த வெளிநாடுகளில்இருந்து ஏராளமான நிதி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டன், கனடா, ஜெர்மனி உட்பட பல நாடுகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. என்ஜிஓ.க்கள் மூலம் ஏராளமான நிதி இந்த போராட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா வில் உள்ள காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர் என்று என்ஐஏ.வின் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x