Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உத்தரபிரதேச முன்னாள் எம்எல்ஏ ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை அந்தப் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. மேலும் இந்த அறக்கட்டளை சார்பில் கோயில் கட்டுவதற்காக நன்கொடை பெறும் பணிகள் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்நிலையில், உ.பி. யின் ரே பரேலி மாவட்டம் தேஸ்காவோன் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர பகதூர் சிங் ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1,11,11,111 தொகைக்கான காசோலையை விஷ்வ இந்து பரிஷத் துணைத் தலைவரும், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலருமான சம்பத் ராயிடம் டெல்லியில் நேற்று முன்தினம் வழங்கினார்.
இந்தக் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சமும், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு குடும்பத்தார் ரூ.5 லட்சமும் ஏற்கெனவே வழங்கியுள்ளனர். நன்கொடை வசூலிக்கும் பொறுப்பை விஎச்பியிடம், அறக்கட்டளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விஎச்பி சர்வதேசசெயல் தலைவர் அலோக் குமார்கூறும்போது, “கோயில் கட்டுவதற்காக முதல் நன்கொடையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து நாங்கள் பெற்றுள்ளோம். பல மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர் களிடமிருந்தும் நிதியைப் பெற்றுள்ளோம்” என்றார்.
உத்தராகண்ட் ஆளுநர் பாபிராணி மவுர்யா ரூ.1.21 லட்சமும்முதல்வர் ரூ.1.51 லட்சமும் நன்கொடையாக வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT