Published : 17 Jan 2021 03:14 AM
Last Updated : 17 Jan 2021 03:14 AM

இந்து கோயில் சிலைகள் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் ஆந்திராவில் பாதிரியார் பிரவீன் சக்ரவர்த்தி கைது

பிரவீன் சக்ரவர்த்தி

அமராவதி:

ஆந்திராவில் இந்து கோயில்களில் உள்ள சிலைகளை உடைத்தது நான் தான் என ஒப்புக்கொண்ட பாதிரியார் உட்பட 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இந்து கோயில் சிலைகள் சமீப காலமாக மர்ம கும்பலால் நாசம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கோயிலில் இருந்த தேர் எரிக்கப்பட்டது. இதன் உச்சகட்டமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்தம் கோதண்டராமர் சிலையின் தலை வெட்டப்பட்டு வேறொரு இடத்தில் வீசப்பட்டது. இந்த சம்பவத்துக்கு தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதுவரை மெத்தனமாக இருந்த ஆந்திர அரசு, சிலை உடைப்பு மற்றும் தேர் எரிப்பு சம்பவங்களை கண்டித்தது. மேலும், இதுகுறித்து சிஐடி விசாரணைக்கும் உத்தரவிட்டது. இது தொடர்பாக போலீஸார் மாநிலம் முழுவதும் தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். இது தொடர்பாக 23 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியினர் என்றும் 7 பேர் பாஜகவினர் என்றும் டிஜிபி தெரிவித்தார்.

இந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், காக்கிநாடாவைச் சேர்ந்த மதபோதகரான பாதிரியார் சக்ரவர்த்தி என்கிற பிரவீன் சக்ரவர்த்தியை காக்கிநாடா போலீஸார்கைது செய்துள்ளனர். பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘காசிப்’ எனும் யூடியூப் சேனலில் சக்ரவர்த்தி சிலநாட்களாக தொடர்ந்து பேசி வந்துள்ளார். இந்த வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக போலீஸார் கூறினர். இதில், பிரவீன்சக்ரவர்த்தி பேசியுள்ள வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், ஆந்திர மாநிலத்தில் இதுவரை 699 இந்து கோயில் சிலைகளை உடைத்துள்ளோம். ராமர் சிலையை துண்டித்ததும் நாங்கள்தான். இது எனக்கு மிகவும் திருப்தியை அளித்துள்ளது. இந்து சிலைகள் வெறும் கற்கள். எங்கள் அறக்கட்டளையில் மொத்தம் 3,642 பாதிரியார்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கிறுஸ்து வில்லேஜ் எனும் பெயரில் கிராமங்களில் மத பிரச்சாரம் மேற்கொண்டு இந்துக்களை மதம் மாற்றுவதே என்களுடைய முக்கிய குறிக்கோள் என பேசியுள்ளார்.

இது தொடர்பாக ஆந்திர சிஐடி போலீஸார் இதுவரை கைது செய்ய முயன்ற அவர்களை தாக்கியுள்ளார். அதன் பின்னர் சிஐடி போலீஸார் பிரவீனை கைது செய்துள்ளனர். இவர் மீது மதக் கலவரம் உண்டாக்க முயன்றதாக 6 பிரிவுகளின் கீழ் சிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் காக்கிநாடா வில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x