Published : 19 Jun 2014 04:29 PM
Last Updated : 19 Jun 2014 04:29 PM

தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய அரசு நெருக்கடி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை ராஜினாமா செய்ய மத்திய அரசு நெருக்கடி அளித்ததைத் தொடர்ந்து, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு, தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய உறுப்பினரும் சி.ஆர்.பி.எப் முன்னாள் இயக்குநருமான ஜே.கே.சின்ஹா கூறுகையில்: எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் கிடைக்காவிட்டாலும், என் சக ஊழியர்கள் அளித்த தகவலின்படி ஐ.மு. கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது உறுதியான தகவல் என்பது தெரிகிறது.

தற்போது நான் வெளியூரில் இருப்பதால், டெல்லி சென்றவுடன் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய துணை தலைவர் சசிதர் ரெட்டி ஏற்கெனவே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறினார்.

ஆனால் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்ட்டபோது, சசிதர் ரெட்டி தான் பதவியை ராஜினாமா செய்யவில்லை என கூறிவிட்டார்.

இதேபோல், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் முன்னாள் இயக்குநர் கே.எம்.சிங், அரசு உயர் அதிகாரி ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தியதாகவும் அதன்படி தானும் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறினார். இருப்பினும், அரசு அதிகாரியின் பெயரை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இதன் துணை தலைவர் கேபினட் அமைச்சர் அந்தஸ்தை கொண்டவர்ராவார். அதன் உறுப்பினர்கள் அனைவரும் மத்திய இணை அமைச்சர்களுக்கு சமமான அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டவர்களாவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x