Last Updated : 16 Jan, 2021 07:42 PM

30  

Published : 16 Jan 2021 07:42 PM
Last Updated : 16 Jan 2021 07:42 PM

மீரட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கூட்டப்பட்ட ‘இந்து பஞ்சாயத்து’: வைரலான வீடியோ பதிவு மீது போலீஸார் விசாரணை

மீரட்

முஸ்லிம்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் மீரட்டில் ‘இந்து பஞ்சாயத்து’ கூட்டப்பட்டுள்ளது. வைரலான இதன் வீடியோ வெளியாகி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

உ.பி.யின் மீரட்டில் இருப்பது மாநில அரசின் சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகம். இதில் ஐந்து நாட்களுக்கு முன் சங்கராச்சார்யா பரிஷத் எனும் அமைப்பின் தலைவரான சுவாமி ஆனந்த் ஸ்வரூப் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

'இந்து பஞ்சாயத்து’ எனப் பெயரிடப்பட்ட அக்கூட்டத்தில் ஏராளமான வலதுசாரி சிந்தனையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தலைமை ஏற்று பேசிய சுவாமி ஆனந்த் ஸ்வரூப்பின் பேச்சால் சர்ச்சை கிளம்பிவிட்டது.

வீடியோ பதிவில் ஆனந்த் ஸ்வரூப் பேசுகையில், "முஸ்லிம்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், எங்களுடன் நீங்கள் இணைந்திருக்க வேண்டும் எனில், முதலில் அனைவரும் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே வீடியோவில் தொடர்ந்து பேசிய சுவாமி ஆனந்த் ஸ்வரூப் கூறும்போது, "இதற்காக முஸ்லிம்களின் கடைகளில் எதையும் வாங்கக் கூடாது என நாம் இந்துக்கள் முடிவெடுக்க வேண்டும். இதுபோல், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தம் இஸ்லாத்தை விட்டு இந்து மதத்திற்கு மாறுவார்கள்" எனத் தெரிவிக்கிறார்.

இதுபோல், சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது சுவாமி ஆனந்த் ஸ்வரூப்பிற்கு முதன்முறையல்ல. இவர் கடந்த ஜனவரி 6ஆம் தேதியிலும் கொல்கத்தாவின் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் சுவாமி ஆனந்த் ஸ்வரூப், இந்து பஞ்சாயத்துகளை நடத்தி, சர்ச்சையாக்கி வருவதாகப் புகார் உள்ளது. மீரட்டின் வீடியோ பதிவுகளை உ.பி. சைபர் கிரைம் பிரிவிற்கு மீரட் போலீஸார் விசாரணைக்கு அனுப்பியுள்ளனர்.

மீரட்டின் நிகழ்ச்சிக்காக சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்திடம் பாக்யோதயா பவுண்டேஷன் எனும் அமைப்பின் சார்பில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மீதான புகார் பல்கலை. நிர்வாகம் மீது எழுந்துள்ளது.

இதற்குப் பதிலளித்த துணைவேந்தரான பேராசிரியர் என்.கே.தனேஜா, நிர்வாகமோ தம் பேராசிரியர்களோ எவரும் கலந்துகொள்ளவில்லை எனவும், எனவே, அதற்கும் தமக்கும் சம்மந்தம் இல்லை என்றும் கைவிரித்துள்ளார்.

இதுகுறித்து பாக்யோதயா பவுண்டேஷனின் தலைவரான ராம் மஹேஷ் மிஸ்ரா கூறும்போது, "இந்துக்களை ஒன்றிணைக்கவே இதுபோன்ற பஞ்சாயத்துகளை நடத்தி வருகிறோம். இவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்துவிட்டால் நம் நாடு மிகவும் வலிமையானதாகிவிடும். டெல்லி, லக்னோ, பலியா மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற இதன் அடுத்த கூட்டம் ஹரித்துவாரில் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x