Last Updated : 16 Jan, 2021 06:57 PM

 

Published : 16 Jan 2021 06:57 PM
Last Updated : 16 Jan 2021 06:57 PM

உ.பி. அரசு மருத்துவமனையின் படுக்கைகளில் தெருநாய்கள் அமர்வதாக நோயாளிகள் புகார்

உத்தரப் பிரதேசம் முராதாபாத் அரசு மருத்துவமனையின் படுக்கைகளில் தெருநாய்கள் வந்து அமர்கின்றன. இதனால், அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து புகார் செய்துள்ளனர்.

கடந்த வாரம் உ.பி.யின் சில மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அப்பகுதியின் தெருநாய்கள் சாதாரணமாகச் சென்று வருவது வழக்கமாகிவிட்டதாகப் புகார் உள்ளது. இதன் மீது மிர்சாபூரின் அரசு மருத்துவமனையின் படுக்கையில் தெருநாய் ஒன்று அமர்ந்த படம் செய்தியுடன் வெளியானது.

அப்போது, ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சோம்நாத் பாரதி, கடந்த ஜனவரி 11இல் உ.பி.யின் ராய் பரேலிக்கு வந்திருந்தார். அரசு மருத்துவமனை படுக்கையில் நாய் இருந்த செய்தியைக் குறிப்பிட்டு உ.பி. அரசையும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவர் விமர்சித்தார்.

இதில், உ.பி.யின் அரசு மருத்துவமனைகளில் நாய்களுக்குத்தான் குழந்தைகள் பிறப்பதாகவும் குறிப்பிட்டார். இதனால், கோபமடைந்த வலதுசாரி ஆதரவாளர்களில் சிலர், ராய் பரேலி விடுதியில் தங்கிய சோம்நாத் மீது கறுப்பு மையை வீசிச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து அப்பகுதியின் ஜெக்தீஷ்பூர் காவல் நிலையத்தார் சோம்நாத் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில், சோம்நாத் சர்ச்சைக்குரியதாகப் பேசி, இரண்டு தரப்பினருக்குள் மோதலை உருவாக்க முயன்றதாகப் புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கில் சோம்நாத் கைதாகி அருகிலுள்ள சுல்தான்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு அவர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், உ.பி.யின் முராதாபாத் அரசு மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவின் படுக்கையிலும் ஒரு நாய் அமர்ந்திருக்கும் வீடியோ பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலானது.

இதன் காரணமாக முராதாபாத்தின் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாதுகாப்பாகக் கருதப்படும் அரசு மருத்துவமனையில் சாதாரணமாக நுழையும் நாய்களால் கடிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அஞ்சினர்.

இதன் மீதான புகாரில் அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இப்பிரச்சினையில் கவனக்குறைவாக இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x