Last Updated : 15 Jan, 2021 01:35 PM

 

Published : 15 Jan 2021 01:35 PM
Last Updated : 15 Jan 2021 01:35 PM

மத்திய விஸ்டா திட்டம்: புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி தொடங்கியது

மத்திய விஸ்டா திட்டத்தின்படி, புதிய நாடாளுமன்றம் கட்டும் பணி இன்று தொடங்கியது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி ஒரு மாதத்துக்குப் பின் பல்வேறு தாமதங்களுக்கு இடையே இன்று தொடங்கியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப்போதைய நாடாளுமன்றம் 94 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடம் கட்டும்போது அப்போது ரூ.83 லட்சம் செலவானது.

இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. தரைதளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.

இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

புதிய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களை உருவாக்கப்பட உள்ளன. மக்களவையில் 888 பேரும், மாநிலங்களவையில் 384 பேரும் அமரும் வகையில் கட்டப்பட உள்ளது. அதிலும் கூட்டுக் கூட்டத்தொடர் நடந்தால் 1,272 பேர் அமரும் வகையில் மிகவும் விஸ்தாரமாக அமைக்கப்பட உள்ளது.

ஸ்மார்ட் டிஸ்ப்ளேவுக்குத் தேவையானவாறு நாற்காலிகள், எம்.பி.க்கள் பயோ-மெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு, முகத்தை வைத்து அடையாளம் காணுதல், அதிநவீன மைக்ரோ போன்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பட வசதிகள் இந்தப் புதிய நாடாளுமன்றத்தில் செய்யப்பட உள்ளன.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைதளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

ஆனால், இந்த நாடாளுமன்றம் கட்டும் விவகாரத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றது குறித்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடிக்கல் நாட்டத் தடையில்லை என முதலில் உத்தரவிட்டது.

இதையடுத்து, புதிய நாடாளுமன்றம் கட்ட கடந்த மாதம் 10-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்குத் தடையில்லை என்று கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு மாத தாமதத்துக்குப் பின் இன்று கட்டிடப் பணிகள் தொடங்கின.

புதிய நாடாளுமன்றத்தை டாடா புராஜெக்ட்ஸ் லிமிட் நிறுவனம் எடுத்துச் செய்து வருகிறது. இந்தத் திட்டம் குறித்து நிறுவனத்தின் தலைவர் சந்தீப் நவ்லாகே கூறுகையில், “எங்கள் திட்டப்படி தொடங்காமல் 35 தாமதமாகவே கட்டிடப் பணி இன்று தொடங்கியது.

மத்திய அரசு கோரியுள்ளபடி குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. முடித்துவிடுவோம் என நம்புகிறோம். குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து தேசத்துக்கு ஒப்படைப்போம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x