Last Updated : 14 Jan, 2021 10:59 AM

 

Published : 14 Jan 2021 10:59 AM
Last Updated : 14 Jan 2021 10:59 AM

சீதாவை அவமதிக்கும் வகையில் விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி தலையை கொய்பவருக்கு ரூ.5 கோடி பரிசு: அயோத்தி மடத்தின் சாது அறிவிப்பு

கொல்கத்தாவின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பியான கல்யாண் பானர்ஜி சீதா மாதாவை அவமதித்து விமர்சித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், அவரது தலையை கொய்பவருக்கு ரூ.5 கோடி பரிசு அளிப்பதாக அயோத்தி மடத்தின் சாது அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பியாக இருப்பவர் கல்யாண் பானர்ஜி. அம்மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கானப் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் சமீபத்தில் பேசினார்.

அப்போது, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச அரசின் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் குறிப்பிட்டு பேசினார். இதில், உபி இந்துக்களால் முக்கியக் கடவுளாகக் கருதப்படும் சீதா மாதாவை அவமதிக்கும் வகையில் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது.

இதன் மீதான படக்காட்சிகள் சமூகவலைதளங்களில் பதிவேற்றமாகி வைரலாகி இருந்தது. இதை பார்த்த அயோத்தியின் சாதுக்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

எம்.பி. பானர்ஜி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் தலைவரான சாது பரமஹன்ஸ் தாஸ், பானர்ஜியின் தலையை கொய்பவர்களுக்கு பரிசு அறிவித்துள்ளார்.

இது குறித்து சாது பரமஹன்ஸ் தாஸ் கூறும்போது, ‘எங்கள் சீதா மாதாவை அவமதித்த எம்.பியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இல்லையெனில், சாதுக்கள் ஆயுதங்கள் ஏந்தி இந்துக்களின் பாதுகாப்பிற்காகக் களம் இறங்க வேண்டி இருக்கும். கீழ்தரமான அரசியலுக்காக கடவுளையே அவமதித்து பேசியவரின் தலைமை கொய்து வருபவருக்கு ரூ.5 கோடி பரிசு அளிக்கப்படும்.’ எனத் தெரிவித்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தியவர் சாது பரமஹன்ஸ். இதன்மூலம், சற்று பிரபலமானவர்,

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சமீபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கினார். தற்போது திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யின் தலையை கொய்பவருக்கு பரிசு அறிவித்து சர்ச்சை கிளம்பியுள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விஷ்வ இந்து பரிஷத்தின் அயோத்தி செய்தி தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, ‘சீதா மாதா மீது பேசி அவரது மறுஉருவமான கொல்கத்தா காளியையும் எம்.பி. பானர்ஜி அவமானப்படுத்தி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் தேசவிரோத சக்திகளையும், ஊடுருவும் வெளிநாட்டினரையும் திரிணமூல் காங்கிரஸினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதன்மூலம், இந்தியாவிலிருந்து அம்மாநிலத்தை தனிமைப்படுத்திக் கொள்ளவும் முயல்கின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதுபோல், குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கை மீது விமர்சனம் செய்பவர்கள் தலைக்கு பரிசு அறிவிப்பது முதன்முறையல்ல. இதற்கு முன் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவமதித்ததாக அவர்களது தலையை கொய்பவர்களுக்கு உ.பி.யின் முஸ்லிம் தலைவர்கள் பரிசு அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x