Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM
விமானப்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 83 அதிநவீன தேஜஸ் போர் விமானங்களை ரூ.48,000 கோடிக்கு வாங்க பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
விமானப்படையை மேலும் பலப்படுத்தும் வகையில் நவீன தேஜஸ் மார்க் 1 ரக போர் விமானம் கடந்த ஆண்டு விமானப்படையில் இணைக்கப்பட்டது. தேஜஸ் ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. கூடுதல் சிறப்பு அம்சங்கள், தாக்குதல், கண்காணிப்பு திறன் கொண்ட இந்த அதிநவீன தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த ரக தேஜஸ் போர் விமானங்களை வாங்க ராணுவ கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் விமானப்படைக்கு ரூ.48,000 கோடி மதிப்பில் அதிநவீன தேஜஸ் மார்க் 1ஏ ரகத்தைச் சேர்ந்த 83 விமானங்களை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இலகு ரக விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்ஏஎல்) நிறுவனத்திடம் இருந்து இந்த விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில், ‘‘ரூ.48,000 கோடி மதிப்பில் 83 அதிநவீன தேஜஸ் விமானங்களை எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டு தயாரிப்பு ராணுவ தளவாட கொள்முதலில் இது மிகப்பெரியதாகும்.
இந்தியா ராணுவ தளவாட உற்பத்தித் துறையில் தன்னிறைவு பெறுவதில் இது முக்கிய திருப்புமுனையாக அமையும். மேலும் தேஜஸ் போர் விமானங்கள் வரும் ஆண்டுகளில் இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கி விமானப்படையை மேலும் பலமுள்ளதாக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT