Published : 13 Jan 2021 05:57 PM
Last Updated : 13 Jan 2021 05:57 PM

தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை: ரமேஷ் பொக்ரியால் ஆய்வு

புதுடெல்லி

புதிய கல்விக் கொள்கை-2020ன் அமலாக்கம் குறித்து, மத்திய கல்வித்துறை மூத்த அதிகாரிகளுடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆய்வு செய்தார்.

மாணவர்கள் பள்ளி கல்வியிலிருந்து, உயர் கல்விக்கு சுமூகமாக மாறுவதற்கான வசதிகளை செய்ய, கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளுக்கிடையே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான பணிக் குழுவை அமைக்க, இந்தக் கூட்டத்தில், அமைச்சர் பரிந்துரைத்தார். தேசிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்துவதை உறுதி செய்ய, உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் மறுபரிசீலனை குழு மற்றும் அமலாக்கக் குழு அமைக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

தொகுப்பு கலாச்சாரத்திலிருந்து, காப்புரிமை கலாச்சாரத்துக்கு மாறுவதில் கவனம் செலுத்த வேண்டிய தேவையை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தினார். இந்தக் கல்வி கொள்கையின் வெற்றிக்கு, தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பு மற்றும் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றின் பங்கு முக்கியமானது. அதனால் அவை 2021-2022ம் ஆண்டில் நிறுவப்பட வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கும், அரசின் தற்போதைய கொள்கைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை உறுதி செய்ய வேண்டும் என அவர் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார். சிறப்பான முடிவுகளுக்கு, தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் இடையே தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உயர் கல்வி அமலாக்கத்துக்கு மொத்தம் 181 பணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, காலக்கெடு மற்றும் இலக்குகளுடன் அட்டவணை தயாரிக்கலாம் என அவர் ஆலோசனை கூறினார். இந்தப் பணிகளை அமல்படுத்த மாத மற்றும் வார அட்டவணை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அப்போதுதான் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து அனைத்து தரப்பினரின் செயல்பாடுகளும் பதிவு செய்யப்படும் என அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x