Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM
ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபல்லி கூடம் பகுதியைச் சேர்ந்தவர் தாத்தாஜி நாயுடு (25). இவரும் மலக்பல்லி பகுதியைச் சேர்ந்த பாவனி (22) என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு தாத்தாஜி நாயுடு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்ள தாத்தாஜியும் ஒப்புக் கொண்டுள்ளார். இதை அறிந்த காதலி பாவனி ஆத்திரம் அடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திருமணம் குறித்து பேச வேண்டும் என தாத்தாஜியை பாவனி அழைத்துள்ளார். அவரும் தனது பைக்கில் பங்கிடி எனும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த பாவனி, தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என தாத்தாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இரவு வரை இவர்கள் இருவரும் சில இடங்களில் பைக்கில் சுற்றி திரிந்துள்ளனர்.
அதன் பின்னர், பாவனியை அவரது ஊரில் இறக்கி விட தனது பைக்கில் தாத்தாஜி அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வழியில், தான் எடுத்து வந்திருந்த கத்தியால், தாத்தாஜியின் முதுகில் பாவனி குத்தி உள்ளார். இதில் நிலைக்குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த தாத்தாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் பாவனியை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT