Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

தேர்தல் ஆணைய இணை இயக்குநர் பணி நீக்கம்: விதிகளை மீறி விடுப்பு எடுத்ததாகக் கூறி ஆந்திர தேர்தல் ஆணையம் நடவடிக்கை

அமராவதி

ஆந்திர மாநில தேர்தல் ஆணையஇணை இயக்குநர் விதிமுறைகளுக்கு மாறாக விடுப்பு எடுத்த தால்அவரை மாநில தேர்தல் ஆணையம் பணி நீக்கம் செய்துள்ளது.

ஆந்திர மாநில தேர்தல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன் அடிப்படையில், ரமேஷ் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். ஆந்திர அரசின் செயல்பாடு தனக்கு எதிரானது என்ற வாதத்தை முன்வைத்தார் ரமேஷ். இதையடுத்து, அவரை மீண்டும் தேர்தல் ஆணையராக நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பஞ்சாயத்து தேர்தல் தேதி, விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், புதிய வகை கரோனா பரவுவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என மாநில தலைமைச் செயலாளர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்எழுதப்பட்டது. ஆனால் பல மாநிலங்களில் தேர்தல் நடந்து வருவதால், ஏற்கெனவே தாமதமான பஞ்சாயத்து தேர்தலை எக்காரணத்தினாலும் தள்ளி வைக்க இயலாது என தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் திட்டவட்டமாக அறிவித்தார்.

ஆனால், கரோனா காரணமாக தேர்தல் பணிகளில் ஈடுபட இயலாது என அரசு ஊழியர் சங்கமும் கருத்து தெரிவித்தது. ஆயினும் பஞ்சாயத்து தேர்தலை நடத்தியே தீர வேண்டுமென மாநில தேர்தல் ஆணையர் ரமேஷ் குமார் பிடிவாதமாக இருந்தார். இதனால், ஜெகன் அரசுக்கும் ரமேஷ்குமாருக்கும் இடையிலான பனிப்போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊழியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணைய இணை இயக்குநர் சாய் பிரசாத் கடந்த 9-ம் தேதி முதல் ஒரு மாத விடுப்பில் சென்றார். இதையடுத்து, விதிமுறைகளை மீறி விடுப்பு எடுத்ததாகக் கூறி சாய் பிரசாத் மீது தேர்தல் ஆணையம் நேற்று ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. விதிமுறைகளை மீறிவிடுப்பு எடுத்தால் மற்ற ஊழியர்களுக்கு அது ஒரு முன்னுதாரணமாகி விடும் என்பதால், இணை இயக்குநர் சாய் பிரசாத்தை பணி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்தேர்தல் ஆணைய விதி எண் 243 மற்றும் 324-ன் படி சாய் பிரசாத் மற்றஅரசு பணிகளிலும் சேரக் கூடாது என தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக ஜெகன் அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்குமான பிரச்சினை அதிகரித்துள்ளது.

தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை

ஆந்திராவில் வரும் பிப்ரவரி மாதம் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. புதிய வகை கரோனா பரவி வருவதால் பஞ்சாயத்து தேர்தலை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடக் கோரி அமராவதி உயர் நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மனு தாக்கல் செய்தது. இதனை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், மக்கள் நலனுக்கு எதிராக உள்ளதாக கூறி பஞ்சாயத்து தேர்தலை நடத்த தடை உத்தரவு பிறப்பித்தது. கரோனா தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடைந்த பின்னர் தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x