Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

பண மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி பெற்றதாக புகார்; நடிகை குட்டி ராதிகா யார் என்றே தெரியாது- கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பல்டி

நடிகை குட்டி ராதிகாவுடன் குமாரசாமி

பெங்களூரு

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்? என்றே எனக்கு தெரியாது என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும்,மஜத மூத்த தலைவருமான குமாரசாமி நேற்று மண்டியாவில் உள்ள நீலகெரே கிராமத்தில் குடிநீர்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ‘‘மோசடி வழக்கில் கைதான‌ ஜோதிடர் யுவராஜ் சுவாமியிடம் இருந்து நடிகை குட்டி ராதிகா ரூ.1.5 கோடி பணம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் குட்டி ராதிகாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அது பற்றி உங்கள் கருத்து என்ன?'' என கேள்வி எழுப்பினர்.

அதற்கு குமாரசாமி, ‘‘குட்டி ராதிகா யார்? அவர் யார் என்றே எனக்கு தெரியாது. எனக்கு தெரியாத ஒருவரைப் பற்றி நான்ஏன் கருத்து சொல்ல வேண்டும்? பத்திரிகையாளர்கள் தேவையற்ற கேள்விகளை கேட்டு என் நேரத்தைவீணடிக்கக் கூடாது''என பதிலளித்தார். குமாரசாமியின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, காங்கிரஸ் ஆதரவாளர்கள் குட்டி ராதிகாவுடன் குமாரசாமி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் குமாரசாமி கன்னடத்தில் ஏராளமானதிரைப்படங்களை தயாரித்துள்ளார். அந்த படங்களில் குட்டி ராதிகா நடித்தன் மூலம் அவருக்கு அறிமுகமானார். பின்னர் குமாரசாமி குட்டி ராதிகாவை 2-வது திருமணம் செய்துகொண்டார். இது அவரது குடும்பத்தில் பிரச்சினையை ஏற்படுத்திய நிலையில், அவரை விட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x