Last Updated : 19 Jun, 2014 09:26 AM

 

Published : 19 Jun 2014 09:26 AM
Last Updated : 19 Jun 2014 09:26 AM

மத்திய அமைச்சர் நிகால்சந்த் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் நிகால்சந்த் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் நிகால்சந்த் மேக்வால். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவரும், இவரது நண்பர்களும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் கடந்த 2011-ம் ஆண்டு புகார் கொடுத்திருந்தார்.

நிகால்சந்த் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டின் அடிப்படையில், நிகால்சந்த் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட் டுள்ளது.

மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், நிகால்சந்த்தை பதவி நீக்கக் கோரி மகளிர் காங்கிரஸ் சார்பில் டெல்லி பாஜக அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது, மகளிர் காங்கிரஸ் தலைவி ஷோபா ஓஜா கூறும்போது, ‘பெண்களுக்கு எதிரான குற்றத்தை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ஒருபுறம் பேசுகிறார். மறுபுறம் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளான ஒருவரை அவரது அமைச்சரவையில் வைத்துள்ளார். அவரும் ராஜினாமா செய்யவில்லை, நரேந்திர மோடியும் அவரை நீக்கவில்லை.

இது, பாஜகவின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளார். நிகால்சந்த் அமைச்சராக நீடிக்கும்வரை, அப்பெண்ணுக்கு நெருக்கடி தொடரும். எனவே, நிகால்சந்த் உடனே பதவி விலக வேண்டும்,’ என்றார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பி.சி.சாக்கோ இதுபற்றி கூறும்போது, ‘பாலியல் பலாத்காரம் போன்ற மோசமான ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் மத்திய அமைச்சரவையில் நீடிப்பது பாரதிய ஜனதா அரசுக்கு அவமானம். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. நிகால்சந்த் இனி ஒரு வினாடி கூட அமைச்சராக நீடிக்க அனுமதிக்க கூடாது. அரசியல் ரீதியாக நடந்து கொள்ளாமல், தார்மீக அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

‘பிரதமரை சந்திப்பேன்’

இதற்கிடையே, மத்திய அமைச்சரால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தன் சொந்த ஊரில் நிருபர்களிடம் பேசும்போது, ‘பிரதமர் நரேந்திர மோடி நல்ல மனிதர். பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்துள்ளார். அவரது அமைச்சரவையில் நிகால்சந்த் நீடிக்க கூடாது. எனக்கு நீதி கிடைக்க நான் போராடுவேன். இது தொடர்பாக, டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முயற்சிப்பேன்,’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x