

மகாத்மா காந்தியை சுட்டு படுகொலை செய்த கோட்சே பெயரில் மத்தியப் பிரதேசத்தில் கல்வி மையம் ஒன்றைத் தொடங்கியுள்ளது இந்து மகாசபா அமைப்பு.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் நாதுராம் கோட்சே பெயரில் நூலகம் அடங்கிய கல்வி மையம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மகா சபாவின் செயற்பாட்டாளர் ஒருவர் கூறியதாவது:
இந்தியப் பிரிவினை குறித்து இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல் மற்றும் விழிப்புணர்வை பரப்புதல் இதன் அடிப்படை நோக்கமாகும். இதில் மஹாராணா பிரதாப் போன்ற வரலாற்று ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
1947- ல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னால் இருந்தது காங்கிரஸ் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. எனவே வரும் தலைமுறையினருக்கு இந்திய பாகிஸ்தான் பிரிவினை குறித்து முழுமையான வரலாறை அறியும்படி செய்யவேண்டும்.
அவ்வகையில் நாதுராம் கோட்சே கியான்ஷாலா கல்வி மையம் இந்தியப் பிரிவினையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி இளம் தலைமுறையினருக்குத் தெரிவிக்கும். அதற்கான நூலகமாகவும் இம் மையம் விளங்குகிறது.
இங்கு பயிற்றுவிக்கப்படும் கல்வியின் மூலம் குரு கோபிந்த் சிங். சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மஹாராணா பிரதாப், இந்து மகாசபா தேசிய துணைத் தலைவர் ஜெயவீர் பரத்வாஜ் போன்ற தேசியத் தலைவர்கள் பற்றிய தகவல்களைப் பரப்பப்படும்.
இவ்வாறு இந்து மகா சபையின் செயற்பாட்டாளர் தெரிவித்தார்.