Published : 11 Jan 2021 10:36 AM
Last Updated : 11 Jan 2021 10:36 AM

டெல்லியிலும் பறவைக்காய்ச்சல் உறுதி: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி

டெல்லியில் உயிரிழந்த காக்கைகள் மற்றும் வாத்துக்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவற்றுக்கு பறவைக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. மேலும், ஹரியாணா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவி ஏராளமான கோழிகள் இறந்துள்ளன.

குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டம் மற்றும் ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் காகம்/ வன பறவைகளின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை, ஏழு மாநிலங்களில் (கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம்) பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள இரண்டு மாவட்டங்களிலும் ஒழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. கண்காணிப்பு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் கேரள மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய குழுக்கள் கேரளா சென்றடைந்து அங்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மற்றொரு குழு ஹிமாச்சலப் பிரதேசம் சென்றடைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றது.

இந்தநிலையில் வேறு சில மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. டெல்லி, மகாராஷ்டிராவில் சில பறவைகள் இறந்ததாக தெரிய வந்ததையடுத்து அங்கிருந்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் டெல்லியில் பறவைக்காய்ச்சல் பரவி வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் உயிரிழந்த காக்கைகள் மற்றும் வாத்துக்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் அவற்றுக்கு பறவைக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய கால்நடை வளர்ப்புத்துறை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து டெல்லியிலும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x