

மும்பையில் சிவாஜி பூங்கா பகுதியில், சிவசேனா கட்சியினர் தசரா ஊர்வலம் நடத்த மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
வரும் 22-தேதி தசரா ஊர்வலத்தை பிறருக்கு தொந்தரவு அளிக்காத விதத்திலும் ஒலி மாசு ஏற்படாமலும் நடத்திக்கொள்ளலாம் என்ற கட்டுப்பாடுடன் கூடிய உத்தரவை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம். கனாடே மற்றும் ஷாலினி பன்ஷல்கர் ஜோஷி அடங்கிய அமர்வு அளித்துள்ளது.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக தசரா ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அதற்கு தடை விதிக்கக் கூடிய எந்த அவசியமும் தற்போது ஏற்படவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மும்பை சிவாஜி பூங்கா அருகே தசரா ஊர்வலம் நடத்த, சிவசேனா நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. அந்தப் பகுதி மக்கள் சிலர், அங்கு ஊர்வலம் நடத்தப்படுவதால் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சிவசேனாவுக்கு ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மான சேனாவும் எதிர்ப்பு தெரிவித்தது.
இருப்பினும் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்க ஏற்கத்தக்க காரணங்கள் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.