Published : 09 Jan 2021 09:45 PM
Last Updated : 09 Jan 2021 09:45 PM

மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது: வெங்கய்ய நாயுடு

புதுடெல்லி

மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைகளின் முக்கியத்துவத்தை குறித்து பேசிய குடியரசுத் துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடு, மக்களின் முழு நம்பிக்கையோடு நாடாளுமன்ற ஜனநாயகம் சிறப்பாக செயல்படுவதற்கு சட்டமியற்றும் அமைப்புகள் மற்றும் உறுப்பினர்களின் மாண்புகள் காக்கப்படுவது அவசியம் என்று கூறினார்.

அதிகாரிகள் மற்றும் நீதித்துறையின் முடிவுகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளிக்கும் கருவிகள் சட்டமியற்றும் அமைப்புகள் என்று கூறிய அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சரியாக செயல்படவில்லை என்றாலோ அல்லது அவர்களது தொகுதி மக்களின் மரியாதையை பெறவில்லை என்றாலோ அவர்களது சட்டப்பூர்வ தன்மை கேள்விக்குள்ளாவதாக தெரிவித்தார்.

பனாஜியில் நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் தின நிகழ்ச்சியில் கோவாவின் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே உரையாடிய நாயுடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களது கடமைகளை பகுதி நேரமாக செய்யக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சிறப்பாக செயலாற்றி சட்டத்தை இயற்றுபவர்கள் மற்றும் அவைகளின் மாண்பை காக்க வேண்டும் என்று நாயுடு வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், சுதந்திரத்திற்கு பின் கோவா சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தாலும், 57 வருடங்களில் 30 அரசுகள் ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

தகுந்த காரணங்களோடு அரசின் திட்டங்களை எதிர்த்தல் நல்லது, எதிர்க்க வேண்டுமே என்பதற்காக எதிர்ப்பது தவறானது என்று எதிர்கட்சிகள்க்கு நாயுடு கூறினார்.

சிறப்பாக செயல்படுவது எப்படி என்று கோவா சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே நாயுடு உரையாற்றினார். கோவா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, முதல்வர் டாக்டர் பிரமோத் சவந்த், சட்டப்பேரவை தலைவர் ராஜேஷ் பட்நேகர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x