Last Updated : 09 Jan, 2021 10:29 AM

 

Published : 09 Jan 2021 10:29 AM
Last Updated : 09 Jan 2021 10:29 AM

மகாராஷ்டிர அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 பச்சிளங் குழந்தைகள் பலி: மோடி, ராகுல் இரங்கல்

பிரதமர் மோடி | படம்: ஏஎன்ஐ

மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 10 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மும்பையிலிருந்து 900 கி.மீ.தொலைவில் உள்ள பண்டாரா மாவட்டத்தில் உள்ள நான்கு மாடி மருத்துவமனை ஒன்றில் இந்தக் கோரச் சம்பவம் அதிகாலை 2 மணியளவில் நடந்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட சிவில் சர்ஜன் பிரமோத் கண்டேட் பிடிஐயிடம் கூறியதாவது:

''பண்டாரா மாவட்டப் பொது மருத்துவமனையின் எஸ்.என்.சி.யுவில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் இறந்தனர்.

மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கான சிறப்புப் பராமரிப்புப் பிரிவு (Special Newborn Care Unit ) வார்டில் பதினேழு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்னர். அவர்களில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 குழந்தைகள் தீயணைப்புப் படை அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்; வெளியேறும் பகுதியில் இருந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களை மீட்க முடியவில்லை. மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

இதில் ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதத்துக்கு உட்பட்ட 10 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தை பராமரிப்புப் பிரிவில் இருந்து புகை வெளியேறுவதை ஒரு செவிலியர் முதலில் கவனித்துள்ளார். மேலும், அவர் மருத்துவர்களை எச்சரித்தார்''.

இவ்வாறு மாவட்ட சிவில் சர்ஜன் தெரிவித்தார்.

மோடி இரங்கல்

குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த இக்கோரச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது:

"மகாராஷ்டிராவின் பண்டாராவில் நெஞ்சைப் பிளக்கும் சோகம் நடந்துள்ளது. அங்கு நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம். என் எண்ணங்கள் முழுவதும் துயரமடைந்த அனைத்துக் குடும்பங்களுடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் சீக்கிரம் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்"

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல்

இதுகுறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், "மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டப் பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் துயரமானது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்.

காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மகாராஷ்டிர அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x