Published : 06 Jan 2021 03:12 AM
Last Updated : 06 Jan 2021 03:12 AM
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களை இயற்றியதில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பங்கு இருந்ததாகவும் இதன்மூலம் பெரிய ஆதாயம் அடைய திட்டமிட்டிருப்பதாகவும் போராட்டக்காரர்களில் சிலர் கூறிவருகின்றனர்.
இதனால் தூண்டப்பட்டு பலர் பஞ்சாபில் உள்ள 1,500 ஜியோ செல்போன் கோபுரங்களை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் நிறுவன கடைகள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுதொடர்பாகபஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "ரிலையன்ஸ் நிறுவனம் மீது வதந்தி பரப்புவதோடு, நிறுவன சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கப்படுகிறது. கார்ப்பரேட் விவசாயம் செய்யும் திட்டம் எதுவும் ரிலையன்ஸுக்கு இல்லை. வேளாண் சட்டங்களுக்கும் நிறுவனத்துக்கும் எந்த தொடர்புமில்லை. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பஞ்சாப் மாநிலஅரசும் மத்திய அரசும் பொறுப்பேற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இம்மனுவில் பஞ்சாப் மாநிலதலைமைச் செயலர், மத்திய உள்துறை மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகம், பஞ்சாப் மாநிலகாவல் ஆணையர் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு நீதிபதி சுதிர் மிட்டல் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுதொடர்பாக பஞ்சாப் மாநில மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். பிப்ரவரி8-ம் தேதிக்குள் இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT