Published : 06 Jan 2021 03:12 AM
Last Updated : 06 Jan 2021 03:12 AM

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் காலமானார்

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன் திருவனந்தபுரத்தில் நேற்று காலமானார். கடைத்தெருவின் கதைசொல்லி என இலக்கிய விமர்சகர்களாலும், வாசகர்களாலும் கொண்டாடப்பட்ட ஆ.மாதவன் கடந்த 2015ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை தன் ‘இலக்கியச் சுவடுகள்’ என்னும்திறனாய்வு நூலுக்காக பெற்றவர்.

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கைதமுக்கு பகுதியில் தன் மகள் வீட்டில் வசித்துவந்த ஆ.மாதவன் வயது மூப்பின் காரணமாக கடந்த சில தினங்களாக அவதிப்பட்டுவந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். புதினங்கள், திறனாய்வு கட்டுரைகள், மொழிபெயர்ப்பு என பன்முகத்தன்மை கொண்டு விளங்கினாலும் சிறுகதை எழுத்தாளர் என்பதே ஆ.மாதவனின் தனித்த அடையாளமாக நின்றது. திருவனந்தபுரம் சாலைப் பகுதியில் தன் 75 வயதுவரை பாத்திரக்கடை வைத்திருந்த ஆ.மாதவன் அங்கு உலாவிய மனிதர்களையே கதாபாத்திரமாக்கி படைப்புகள் ஆக்கினார். அதன் காரணமாகவே ‘கடைத்தெருவின் கதை சொல்லி’ என புகழப்பட்டார்.

தனது மனைவி சாந்தா, மகன் கோவிந்தராஜன் ஆகியோரின் மறைவுக்குப் பின் தனது மூத்தமகள் கலைச்செல்வி வீட்டில் வசித்து வந்தார். தமிழரான ஆ.மாதவனின் குடும்பம் அவரது தந்தையின் காலத்திலேயே திருவனந்தபுரத்தில் குடியேறிவிட்டது. 1953ம் ஆண்டில் இருந்து மிகத்தீவிரமாக இலக்கிய உலகில் இயங்கிவந்தார் ஆ.மாதவன். புனலும் மணலும், கிருஷ்ண பருந்து உள்ளிட்ட இவரது நாவல்களும், கடைத்தெருக் கதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பும் பரவலாகக்கவனம் பெற்றவை. திருவனந்தபுரத்தில் தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பை ஆ.மாதவன் செய்திருந்தார்.

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், ‘ஆ.மாதவன் எனது ஆதர்சனஎழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாவல்களில் கலைநுட்பங்களைத் தேடி அலைந்தவர் அவர். அற்புதமான மொழிநடையில் நிபுணத்துவம் அவரிடம் இருந்தது. அவர் அளவுக்கு அதில் மேற்கோள்காட்ட தமிழ் இலக்கியத்தில் யாரும் இல்லை என்றே சொல்லலாம். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு’’என்றார். ஆ.மாதவனின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x