நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29-ம் தேதி தொடக்கம்; பிப். 1-ம் தேதி பட்ஜெட்: நாடாளுமன்ற விவகார அமைச்சரவைக் குழு பரிந்துரை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ம் தேதி தொடங்கலாம். பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யலாம். ஏப்ரல் 8-ம் தேதிவரை கூட்டத்தொடரை நடத்தலாம் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டெல்லியில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. குளிர்காலக் கூட்டத் தொடரை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரோடு சேர்த்து நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு எம்.பி.க்களிடம் கடிதம் மூலம் தெரிவித்தது.

கரோனா தொற்றுக்கு மத்தியில் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தி எம்.பி.க்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், பாதுகாவலர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால், முன்னதாகவே கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

அதேபோன்ற சூழல் இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால், கூட்டத்தொடர் நடத்துவது குறித்து மத்திய அரசு மிகவும் கவனத்துடன் ஆலோசித்து குளிர்காலக் கூட்டத்தொடரை ரத்து செய்தது.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று கூடியது. இந்தக் கூட்டம் அளித்த பரிந்துரையின்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் 29-ம் தேதி கூட்டி, வரும் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

பிப்ரவரி 1-ம் தேதி பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யலாம். முதல்கட்டக் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரை நடத்தலாம். 2-வது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 8-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

வரும் 29-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றி, கூட்டத்தொடரைத் தொடங்கி வைக்கிறார். இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படும். எம்.பி.க்கள் சமூக விலகலுடன் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றி அமைக்கப்படும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in