Last Updated : 05 Jan, 2021 03:29 PM

 

Published : 05 Jan 2021 03:29 PM
Last Updated : 05 Jan 2021 03:29 PM

மக்களோடு வரிசையில் நின்று சுகாதார அட்டை பெற்ற மேற்கு வங்க முதல்வர்

மக்களோடு வரிசையில் நின்று சுகாதாரக் காப்பீடு அட்டையைப் பெற்றுக்கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி: படம் | ஏஎன்ஐ.

கொல்கத்தா

மேற்கு வங்க அரசு அறிமுகம் செய்துள்ள ஸ்வஸ்தியா சதி எனும் சுகாதாரக் காப்பீடு ஸ்மார்ட் அட்டையை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று இன்று பெற்றுக்கொண்டார்.

கொல்கத்தாவில் மாநகராட்சிக்கு உட்பட்ட காலிகாட் பகுதியில் உள்ள ஹரிஸ் சாட்டர்ஜி சாலையில் உள்ள தனது வீட்டுக்கு அருகே இருக்கும் ஜாய் இந்து பவனுக்கு இன்று காலை 11.45 மணிக்கு மம்தா பானர்ஜி வந்தார்.

அங்கு ஏராளமான மக்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்ததும், அதிகாரிகள் மக்களை விலக்கிவிட்டு முதல்வர் மம்தாவுக்கு ஸ்மார்ட் அட்டையை வழங்க ஏற்பாடு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளை நகர மேம்பாட்டு அமைச்சர் பர்ஹத் ஹக்கிம் உள்ளிட்ட அதிகாரிகள் செய்தபோது, மம்தா அவர்களைத் தடுத்துவிட்டார்.

மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கிறேன் எனக் கூறி முதல்வர் மம்தா பானர்ஜி வரிசையில் நின்றார். அதன்பின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஸ்வஸ்தியா சதி காப்பீடு ஸ்மார்ட் அட்டையை அதிகாரிகள் வழங்கினர்.

மேற்கு வங்க அரசு கொண்டு வந்துள்ள சுகாதாரக் காப்பீடு திட்டமான ஸ்வஸ்தியா சதியின் கீழ் ஒவ்வொரு குடும்பமும் ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும்.

இந்தத் திட்டம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “இந்த சுகாதாரக் காப்பீடு அட்டையை அனைத்து அமைச்சர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும். நானும் மக்களோடு மக்களாக இணைந்து இந்த அட்டையைப் பெற்றுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதுவரை இந்த சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் இணைய ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x