Last Updated : 05 Jan, 2021 01:36 PM

 

Published : 05 Jan 2021 01:36 PM
Last Updated : 05 Jan 2021 01:36 PM

கேரளாவில் 2 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் கண்டுபிடிப்பு: ஒரு கி.மீ. சுற்றளவில் ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் அழிப்பு

கோப்புப்படம்

கோட்டயம்

கேரள மாநிலத்தின் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் பறவைக் காய்ச்சல் (bird flu H5N8) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாத்துகள், கோழிகள் உள்ளிட்டவை ஒரு கி.மீ. சுற்றளவுக்கு அழிக்கப்பட உள்ளன.

பாதிப்புக்கு உள்ளான பறவைகளின் மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய விலங்குகள் நோய்த் தடுப்பு பாதுகாப்பு மையத்தில் ஆய்வு செய்யப்பட்டபோது பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நெடுமுடி பஞ்சாயத்து, தகழி, பள்ளிபாடு, கருவட்டா பஞ்சாயத்துகளிலும், கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பஞ்சாயத்திலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் இதுவரை 1,700 வாத்துகள் உயிரிழந்துள்ளன.

இதுகுறித்து விலங்குகள் நலத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ குட்டநாடு மண்டலத்தில் மட்டும் 34 ஆயிரம் பறவைகள் உள்ளிட்ட 40 ஆயிரம் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்பதால் அவை அழிக்கப்பட உள்ளன.

பறவைகளை அழிக்கும் பணி இன்று காலை முதல் இந்தப் பஞ்சாயத்துகளில் நடந்து வருகிறது. தற்போது சூழல் கட்டுக்குள் இருக்கிறது. நெடுமுடி பஞ்சாயத்தில் 5,975 பறவைகள், தகழியில் 11,250 பறவைகள், பள்ளிப்பாடில் 4,627 பறவைகள், கருவட்டாவில் 12,750 பறவைகள் அடுத்த 3 நாட்களில் அழிக்கப்படும். இதற்காக 18 பேர் கொண்ட விரைவுப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பறவைகள் அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட உள்ளன. இந்தப் பறவைகள் அழிப்புக்குத் தேவையான டீசல், விறகு, சர்க்கரை போன்றவற்றை அந்தந்தப் பஞ்சாயத்து நிர்வாகங்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பறவைகளைக் கொல்லும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பிபிஇ பாதுகாப்பு ஆடைகள் அணிந்தும், முன்னெச்சரிக்கை தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர் பிறப்பித்த உத்தரவின்படி, குட்டநாடு, கார்த்திகா பள்ளி தாலுக்காவில் இருந்து இறைச்சி, முட்டை, பறவைகளின் கழிவுகள், கோழி, வாத்து இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது

பறவைக் காய்ச்சல் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 கி.மீ. சுற்றளவுக்குள்ளான பகுதிகளில் வனத்துறையினர் புலம்பெயர் பறவைகள் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x