Published : 05 Jan 2021 11:30 AM
Last Updated : 05 Jan 2021 11:30 AM

ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு; குழாய்வழி எரிவாயு திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி

கொச்சி - மங்களூரு இடையேயான குழாய் வழி எரிவாயு திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

450 கி.மீ நீளமுள்ள இந்த குழாய்வழி எரிவாயு திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு, கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கு எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை கடந்து செல்லும். இத்திட்டம் 3 ஆயிரம் கோடி செலவில், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மனித வேலை நாட்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், குழாய்கள் அமைத்தது பொறியியல் சவால். 100க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் நிலைகளை கடந்து இந்த குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘கிடைமட்ட திசையில் துளையிடும் முறை’ என்ற சிறப்பு தொழில்நுட்பம் மூலம் இந்த குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த குழாய் வழி எரிவாயு திட்டம், வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் சுற்றுசூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும். இந்த குழாய்கள் அமைந்துள்ள மாவட்டங்களில், வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயுவும் விநியோகிக்கப்படும். சுத்தமான எரிபொருள் நுகர்வு, காற்று மாசுவை குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும்.

இந்த திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார். இந்நிகழ்வு, ‘ஒரே நாடு, ஒரே எரிவாயு தொகுப்பு’ உருவாக்குவதில், முக்கிய மைல்கல்லை குறிக்கிறது.கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x