Last Updated : 04 Jan, 2021 04:02 PM

 

Published : 04 Jan 2021 04:02 PM
Last Updated : 04 Jan 2021 04:02 PM

கால்நடைகளை பறிமுதல் செய்யும் சட்டப்பிரிவை திரும்பப் பெறுங்கள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

கோப்புப்படம்

புதுடெல்லி

விலங்குகள் கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதியான விசாரணையின்போது, உரிமையார்களிடம் இருந்து கால்நடைகளைப் பறிமுதல் செய்யும் பிரிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் அல்லது திருத்த வேண்டும், இல்லாவிட்டால் அந்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டியது இருக்கும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று எச்சரிக்கை விடுத்தது.

விலங்குகள் கொடுமைத் தடைச்சட்டம் 1960ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் 2017-ம் ஆண்டு மே 23-ம் தேதி கொண்டுவரப்பட்ட திருத்தத்தின்படி, விலங்குகளை பராமரித்தல் கவனத்தில் எனும் பிரிவு சேர்க்கப்பட்டது.

இந்தப் பிரிவின்படி ஒருவர் கால்நடைகளை கொடுமைப்படுத்துவதாக அறிந்தால், அதிகாரிகள் அவரிடம் இருந்து கால்நடைகளை பறிமுதல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த சட்டப்பிரிவை எதிர்த்து எருமை மாடு வர்த்தகர்கள் நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த மனுவில், “ எங்களிடம் இருந்து அதிகாரிகள் வலுக்கட்டாயமாக மாடுகளை பறிமுதல் செய்து கோசாலைகளுக்கு கொண்டு செல்கிறார்கள். கால்நடைகளை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறோம், எங்களின் கால்நடைகளை பறிமுதல் செய்யும் சட்டப்பிரிவை நீக்குங்கள். இந்தச் சட்டம் 1960-ம் ஆண்டுக்கு பின்னோக்கி செல்கிறது. கால்நடைகளை விற்பனை கொண்டு செல்லும் வியாபாரிகள், கொண்டு செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து கால்நடைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் அடிக்கடி மிரட்டுவதும், பணம்பறிப்பதும், சிலர் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவதுமாக இருக்கிறார்கள். இந்த சட்டத்தை தடை செய்யாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் வகுப்பு வாதத்தை ஏற்படுத்தும், சமூகத்தின் நல்லிணக்கம் பாழாகிவிடும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சட்டத்திருத்தம் குறித்து கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கே சுத்திடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டிருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில் “ ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள். இந்த விலங்குகள்தான் (கால்நடைகள்) மனுதாரர்களின் வாழ்தாரம்.நான் விலங்குகள் எனக் குறிப்பிடுவது நாய், பூனை பற்றி அல்ல.

இந்த கால்நடைகளை நீங்கள் எளிதாக அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துவிட முடியாது. விலங்குகள் கொடுமைத் தடைச்சட்டத்தின் கீழ் பிரிவு 29-ன் விதி முற்றிலும் முரணாக இருக்கிறது. ஒருவர் கால்நடைகளை கொடுமைப்படுத்தினார் என குற்றத்தை நிரூபித்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்புதான் அவரிடம் இருந்து கால்நடைகளைப் பறிமுதல் செய்ய முடியும்.

அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபர் தான் வைத்திருக்கும் கால்நடைகளை இழக்க நேரிடும்.
ஒருவர் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் முன்னரே, விசாரணையின்போதே அவரிடம் இருந்து அவர் வைத்திருக்கும் கால்நடைகளை அதிகாரிகள் பறிமுதல்செய்ய முடியாது. ஆனால், இதில் உள்ள சட்டப்பிரிவு சட்டத்துக்கே முரணாக இருக்கிறது.

இந்த சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் நாங்கள் இந்தச் சட்டத்துக்கு தடை விதிக்க நேரிடும். சட்டத்துக்கு முரணாக சட்டவிதி இருப்பதை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, கூடுதல் சொலிசிட்டர் ஜெயந்த் கூறுகையில் “ பல்வேறு சம்பவங்களில் விலங்குகளை கொடுமைப்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை தாக்கல் செய்ய அவகாசம் தேவை” எனக் கோரினார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த ஜனவரி 11ம் தேதி(திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x