கடந்த 11 நாட்களில் ஒரு கோடி கோவிட் பரிசோதனைகள்

கடந்த 11 நாட்களில் ஒரு கோடி கோவிட் பரிசோதனைகள்
Updated on
1 min read

கடந்த 11 நாட்களில் மட்டும் ஒரு கோடி கோவிட் பரிசோதனைகளை மேற்கொண்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.

அதிக அளவிலான பரிசோதனைகளால் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் நோயாளிகளின் மொத்த விகிதம் 5.89 விழுக்காடாகக் குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கோவிட் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 17.5 கோடியைக் (17,56,35,761) கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,35,978 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த அணுகுமுறையாலும், தொடர்ச்சியான நடவடிக்கைகளாலும் இந்தியாவில் அன்றாடம் பதிவாகும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,504 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

உறுதி செய்யப்பட்ட கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை, தற்போது 2,43,953 ஆகக் குறைந்துள்ளது. நமது நாட்டில், கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்குகிறது. குணமடைவோர் விகிதம் 96.19 விழுக்காட்டை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,557 நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அன்றாடம் குணமடைவோர் எண்ணிக்கையில் கேரளா (4,668) முதலிடத்திலும், அதற்கு அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் (2,064) இரண்டாமிடத்திலும், மேற்கு வங்காளம் (1,432) மூன்றாம் இடத்திலும் உள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 4,600 புதிய நோயாளிகள் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 214 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 77.57 சதவீதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in