Published : 04 Jan 2021 03:32 PM
Last Updated : 04 Jan 2021 03:32 PM

சுற்றுலா அமைச்சகத்தின் 'எங்கள் தேசத்தைப் பாருங்கள்' திட்டம் ஓராண்டு நிறைவு

மத்திய சுற்றுலா அமைச்சகம் கடந்த ஆண்டு தொடங்கிய ‘எங்கள் தேசத்தைப் பாருங்கள்’ என்ற திட்டம் ஓராண்டை நிறைவு செய்கிறது.

கடந்த 2020-ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட முக்கிய முன்முயற்சிகளில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு:

• பாரத் திருவிழா: குடியரசு தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி செங்கோட்டை மற்றும் கியான் பத்-தில் ஜனவரி 26 முதல் 31ஆம் தேதி வரை பாரத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ‘மகாத்மாவின் 150 ஆண்டுகள்’, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்' ஆகிய கருப்பொருள்களில் இந்த திருவிழா நடைபெற்றது.

• இன்கிரடிபிள் இந்தியா சுற்றுலா பயணியர் உதவி சான்றிதழ் திட்டம்: இந்தியா முழுவதிலும் இருந்து மின்னணு சாதனங்கள் வாயிலாக இணையதளம் மூலம் கற்கும் வகையில் இன்கிரடிபிள் இந்தியா சுற்றுலா பயணியர் உதவி சான்றிதழ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சுற்றுலாத் தலங்களில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் இந்த திட்டத்தில் 2020 டிசம்பர் 21-ஆம் தேதி வரை 6,402 பேர் பதிவு செய்துள்ளனர்.

• இன்கிரடிபிள் இந்தியா இணையதளம்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் இன்கிரடிபிள் இந்தியாவின் இணையதளம் சீனம், அரபிக் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் தொடங்கப்பட்டது.

• எங்கள் தேசத்தைப் பாருங்கள்: இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களை நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள ஊக்குவிக்கவும் சுற்றுலா அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் ‘எங்கள் தேசத்தைப் பாருங்கள்' என்ற முன்முயற்சியைத் தொடங்கியது. இது ஓராண்டை நிறைவு செய்கிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 2022ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 15 இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைவிடுத்ததை அடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டின் பரந்த கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுலா தலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இணையக் கருத்தரங்கங்களை அமைச்சகம் நடத்தி வருகின்றது. ‘எங்கள் தேசத்தைப் பாருங்கள்' என்ற தலைப்பில் இதுவரை நடைபெற்ற 68 வலைதள கருத்தரங்கங்கள், சுமார் 3 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.

• இந்தியாவில் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வலைவாசல்: பொது முடக்கம்/ விமானங்கள் ரத்து போன்ற காரணங்களால் இந்தியாவில் தங்க நேரிடும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஸ்ட்ரான்டட் இன் இந்தியா (இந்தியாவில் தவிப்போர்) என்னும் வலைவாசலை சுற்றுலா அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. அரசு தங்களுக்காக அளித்துவரும் சேவைகள் குறித்தத் தகவல்களை சுற்றுலா பயணிகள், இந்தத் தளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

• சர்வதேச யோகா தினம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ‘வீட்டிலிருந்து யோகா & குடும்பத்தாருடன் யோகா’ என்பதை மையக் கருவாகக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘எங்கள் தேசத்தைப் பாருங்கள்' என்ற தலைப்பில் கடந்த ஜூன் 20ஆம் தேதி நடைபெற்ற இணையதள கருத்தரங்கில் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

• விருந்தோம்பல் தொழில் துறைக்கான தேசிய தரவு தளம்: விருந்தோம்பல் துறையில் செயல்படும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதற்காக விருந்தோம்பல் தொழில் துறைக்கானதேசிய தரவு தளம் (நிதி) உருவாக்கப்பட்டது. இதுவரை 34,399 தங்கும் விடுதிகள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளன.

• விருந்தோம்பல் தொழில்துறைக்கான மதிப்பீடு, விழிப்புணர்வு மற்றும் பயிற்சி திட்டம் (சாத்தி): கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உணவகங்கள் மற்றும் இதர உணவு நிறுவனங்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக சாத்தி தளம் உருவாக்கப்பட்டது. இதுவரை இந்தத் தளத்தில் இணைந்துள்ள 6810 நிறுவனங்களுக்கு சுய சான்று வழங்கப்பட்டுள்ளது.

• ஒரே பாரதம் உன்னத பாரதம்: ஒரே பாரதம் உன்னத பாரதம் என்னும் திட்டத்தின் கீழ் பெருந்தொற்று காலத்திலும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சுற்றுலா அமைச்சகம் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x