Last Updated : 04 Jan, 2021 12:18 PM

 

Published : 04 Jan 2021 12:18 PM
Last Updated : 04 Jan 2021 12:18 PM

வேளாண் சட்டங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; ஒப்பந்த விவசாயமும் செய்யவில்லை: பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவும் இல்லை. ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 40 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், இந்தச் சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் பயன்பெறும். விளைநிலங்கள் கார்ப்பரேட் கரங்களில் ஒருநாள் சொந்தமாகும் என்று விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களை விவசாயிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸாரும் விவசாயிகள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். விவசாயிகள் தொலைத்தொடர்பு கோபுரங்களைச் சேதப்படுத்தக்கூடாது என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தச் சூழலில் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனம் சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யவில்லை. விவசாயிகளுடன் ஒப்பந்த முறை விவசாயமும் செய்யவில்லை.

நாட்டில் பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ள வேளாண் சட்டங்களால் எங்கள் நிறுவனத்துக்கு எந்தவிதமான ஆதாயமும் இல்லை. அதனால் பலனும் இல்லை. ஆனால், வேளாண் சட்டங்களுடன் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைத்து, எங்கள் நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தீய நோக்கத்துடன் பரப்பி, எங்கள் நிறுவனத்தின் விற்பனையையும், மரியாதையையும் சிலர் கெடுக்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை விவசாயிகளுடன் கான்ட்ராக்ட் விவசாயமோ அல்லது கார்ப்பரேட் விவசாயமோ செய்தது இல்லை. பஞ்சாப், ஹரியாணா மாநிலங்கள் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் விவசாயிகளின் வேளாண் நிலத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒப்பந்த விவசாயத்துக்கோ அல்லது கார்ப்பரேட் விவசாயத்துக்கோ வாங்கவும் இல்லை.

ரிலையன்ஸ் நிறுவனம் நடத்தும் சில்லறை விற்பனைக் கடைகளுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்றவை அன்றாட விற்பனைக்காகவே வாங்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து நேரடியாக உணவு தானியங்கள் வாங்கப்படவில்லை.

நாங்கள் ஒருபோதும் நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யும் விவகாரத்தில் ஒருபோதும் ஈடுபடமாட்டோம். விவசாயிகளிடம் இருந்து நியாமற்ற முறையில் லாபத்தையும் அடையமாட்டோம். விவசாயிகளிடம் இருந்து ஊக்கமளிக்கும் விலையில் இருந்து குறைவாகவும் விளைபொருட்களை வாங்கவும் சப்ளையர்கள் வாங்கமாட்டோம்.

ஆதலால், பஞ்சாப், ஹரியாணாவில் உள்ள எங்களின் தொலைத்தொடர்பு கோபுரங்களைச் சிலர் சேதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதை உடனடியாகத் தடுத்து நிறுத்த அரசு அதிகாரிகளுக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x