Published : 03 Jan 2021 06:15 PM
Last Updated : 03 Jan 2021 06:15 PM

மேற்குவங்க தேர்தலில் போட்டி; முஸ்லிம் தலைவர்கள் சந்திப்புக்கு பின் ஒவைசி அறிவிப்பு

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி இன்று மேற்குவங்க மாநிலம் ஹுக்ளி நகரில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 3-வது முறையாக ஆட்சியைக் பிடிக்க திரிணமூல் காங்கிரஸ் போராடி வருகிறது.

முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்ற பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.

பிஹாரில் அண்மையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிட முயன்று வருகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசும்போது, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பணம் பெற்றுக்கொண்டு வாக்குகளைப் பிரிக்கப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுத்த அசாதுதீன் ஒவைசி பணத்தால் ஒவைசியை வாங்குவதற்கு யாரும் இல்லை, மம்தாவின் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் பாஜக பக்கம் போய்ச் சேரும்போது அவர் அதை நினைத்து வருத்தப்பட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில் அசாதுதீன் ஒவைசி இன்று மேற்குவங்க மாநிலம் ஹுக்ளி நகரில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். முக்கிய தலைவர்களில் ஒருவரான அப்பாஸ் சித்திக்குடன் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். அப்பாஸ் சித்திக் தலைமையில் எங்கள் கட்சி போட்டியிடும். அவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x