Last Updated : 03 Jan, 2021 12:33 PM

 

Published : 03 Jan 2021 12:33 PM
Last Updated : 03 Jan 2021 12:33 PM

கோவிஷீல்ட் தடுப்பூசி வரும் வாரங்களில் வெளிவரத் தயாராக உள்ளது: பூனவல்லா தகவல்

கரோனாவுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசி வரும் வாரங்களில் வெளிவரத் தயாராக உள்ளது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நாட்டின் சில மாநிலங்களில் கோவிட்-19 தடுப்பூசி விநியோகிப்பதற்கான ஒத்திகைப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை சோதிப்பதும், தடுப்பூசி போடப்படுவதில் ஏற்படும் சவால்களை அடையாளம் காண்பதும் இந்த பயிற்சிகளின் நோக்கமாகும் என்று இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்திருந்தது.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரலின் கீழ் இயங்கிவரும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம்அளித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டு அடிப்படையில் இந்தத் தடுப்பூசிக்கு இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பயோடெக் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பூனவல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.தடுப்பூசியை சேமித்து வைப்பதன் மூலம் இறுதியாக @SerumInstIndia எடுத்த அனைத்து அபாயகரமான சோதனைக் கட்டங்களும் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. இந்தியாவின் முதல் கோவிட் -19 தடுப்பூசியாக கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசியான கோவிஷீல்ட் மிகவும் பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி வரும் வாரங்களில் வெளிவரத் தயாராக உள்ளது.

இதற்குக் காரணமான பிரதமர் மோடி, சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன், சுகாதார அமைச்சகம், ஐசிஎம்ஆர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா , கேட்ஸ் பவுண்டேஷன் மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருக்கும் எனது நன்றிகள்''

இவ்வாறு பூனவல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x