

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல கருத்துக் கணிப்பு நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்', உலக தலைவர்களின் தலைமை செயல்பாடுகள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தியது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ ஆகிய 13 நாடுகளின் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் நடத்தப்பட்டகருத்துக் கணிப்பில் 75 சதவீதம் மக்கள் பிரதமர் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளனர். 20 சதவீதம் பேர் எதிர்த்துள்ளனர்.
எதிர்ப்பாளர்களின் வாக்குகள் கழிக்கப்பட்டு மீதமிருக்கும் வாக்குகள் உலக தலைவர்களின் கணக்கில் சேர்க்கப்படுகிறது. அதன்படி மோடிக்கு 55 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அடுத்து மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் 29 சதவீத வாக்குகள், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 27 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சிபதவியேற்றது முதல் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அவரது ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். கடினமான நேரங்களில் அவர் நாட்டை சிறப்பாக வழிநடத்துகிறார்’’ என்று தெரிவித்துள்ளார்