Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM

ஆந்திராவில் ராமர் சிலை உடைக்கப்பட்ட கோதண்டராமர் கோயிலை பார்வையிட்டார் சந்திரபாபு

விஜயநகரம்

ஆந்திராவின் விஜயநகரம் மாவட் டம், ராமதீர்த்தம் பகுதியில் உள்ள கோதண்டராமர் சிலையின் தலை மற்றும் உடல் பாகத்தை மர்ம நபர்கள் உடைத்து வெவ்வேறு பகுதியில் வீசியதால் இந்துக்கள் கொதித்து போய் உள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ராம தீர்த்தம் பகுதிக்கு நேற்று செல்ல இருப்பதாக அறிவித்தார். இதை அறிந்த ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, நேற்று காலையிலேயே தனது ஆதரவாளர்களுடன் அப்பகுதிக்குச் சென்றார். அங்கு, சந்திரபாபுவின் வருகைக்காக காத்திருந்த திரளான மக்கள், விஜய் சாய் வருவதைக் கண்டதும் எரிச்சல் அடைந்தனர்.

இதையடுத்து, கோயிலுக்கு சென்று திரும்பி வந்த விஜய் சாய் கார் மீது அப்பகுதி மக்கள் கற்கள் மற்றும் காலணிளை வீசினர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அங்கு இருந்த போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடு காரில் ராமதீர்த்தம் சென்றார். அவருடன் அவரது கட்சியினரும் நூற்றுக்கணக்கான கார்களில் பின்தொடர்ந்தனர். விஜயநகரம் மாவட்டத்தில் நுழைவதற்கு முன்பு சாலையின் குறுக்கே லாரிகளை நிறுத்தி வைத்த போலீஸார், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து ராமதீர்த்தம் செல்ல விடாமல் தடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, சந்திரபாபு நாயுடுவை ராமதீர்த்தம் செல்ல போலீஸார் அனுமதித்தனர். இதையடுத்து, அவர் கோயிலை பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x