

2021 ஜனவரி 1-ம் தேதி (இன்று) முதல் வங்கிக் காசோலை முதல் ஜிஎஸ்டி வரி ரிட்டன் தாக்கல் செய்வது வரை, வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.
காலாண்டுக்கு ஜிஎஸ்டி ரிட்டன்
வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.5 கோடிக்கு உள்ளாக விற்று முதல் இருக்கும் வர்த்தகர்கள் இனிமேல் காலாண்டுக்கு ஒருமுறைக்கு ஜிஎஸ்டி ரிட்டன்-3பி தாக்கல் செய்தால் போதுமானது. தற்போது மாதம்தோறும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது இனிமேல் 3 மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்யும் நடைமுறை ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
காசோலையில் புதிய விதிமுறை
ஜனவரி 1-ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, வங்கிமோசடிகளைத் தவிர்க்கும் வகையில் ஒருவருக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக காசோலை அளித்தால், பணம் வழங்குதற்கு முன், அந்த காசோலை வழங்கிய நபரிடம் சில முக்கிய விஷயங்களைக் கேட்டு உறுதி செய்யப்படும். இந்த வசதி கட்டாயமானது அல்ல. வங்கி வாடிக்கையாளர்கள் விரும்பினால் இந்த வசதி வைத்துக்கொள்ளலாம். ஆனால், ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ள காசோலைகளுக்கு கட்டாயம் காசோலை வழங்கியநபரிடம் பேசி சில தகவல்கள் பெற்றபின்புதான் பணம்வழங்கப்படும்.
சில கைப்பேசிகளில் வாட்ஸ்அப் நிறுத்தம்
ஜனவரி 1-ம் தேதி முதல் சில வகை செல்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது. ஆன்ட்ராய்ட 4.0.3 மற்றும் ஐபோன் 9, கேஏஐ2.5.1, ஜியோஃபோன், ஜியோஃபோன்2 ஆகியவற்றில் வாட்ஸ்அப் இயங்காது.
கான்டாக்ட்லெஸ் கார்டு பரிவர்த்தனை அளவு அதிகரிப்பு
கிரெடிட் கார்டுகளில் கான்டாக்ட் லெஸ் வகை கார்டுகளில் தற்போது ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும், இது ரூ.5 ஆயிரமாக ஜனவரி 1-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. டிஜிட்டல் பேமெண்ட் முறையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஆர்பிஐ எடுத்துள்ளது.
லேண்ட்லைன் முதல் செல்போன் வரை
லேண்ட்லைன் தொலைபேசியிலிருந்து செல்போன் எண்ணுக்கு அழைப்பதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, லேண்ட்லைனில் இருந்து 10 இலக்கம் கொண்ட செல்போன் எண்ணுக்கு அழைக்கும்போது, முதலில் பூஜ்ஜியம்(0) சேர்த்து மற்ற 10 எண்களை பதிவு செய்து பேசலாம்.இந்த முறை ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
கார் விலை உயர்வு
உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாருதி சுசூகி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, எம்ஜி, ரொனால்ட் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் இன்றுமுதல் கார் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
வீட்டு உபயோகப் பொருட்கள் விலை உயர்வு
எல்இடி டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்றவற்றின் விலை ஜனவரி முதல் விலை உயர்த்தப்பட உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஜி, பானசோனிக், சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களில் 8 முதல் 10 சதவீதம் வரை விலையை உயர்த்தப்பேவதாக அறிவித்துள்ளன.
காப்பர், அலுமினியம், ஸ்டீல் போன்ற பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்துள்ளதையடுத்து, இந்த விலை உயர்வு கொண்டுவரப்படுகிறது.