Last Updated : 01 Jan, 2021 02:00 PM

 

Published : 01 Jan 2021 02:00 PM
Last Updated : 01 Jan 2021 02:00 PM

மக்களுக்கான போராட்டம் தொடரும்: திரிணமூல் காங்கிரஸ் நிறுவன நாளில் மம்தா உறுதி

மம்தா பானர்ஜி | கோப்புப் படம்.

கொல்கத்தா

மக்களுக்கான போராட்டம் தொடரும் என்று திரிணமூல் காங்கிரஸ் நிறுவன நாளான இன்று மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி 1998ல் தொடங்கப்பட்டு 23ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து 34 ஆண்டுகால இடது முன்னணி ஆட்சியைத் தோற்கடித்து 2011ல் மேற்குவங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது.

இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் டி.எம்.சி கட்சியைத் தோற்கடிப்பதற்காக பாஜக மிகப்பெரிய தேர்தல் வியூகத்தை உருவாக்கி செயல்பட்டு வருகிறது வருகிறது. தளராத முயற்சியுடன் திரிணமூல் மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கட்சியின் நிறுவன நாளான இன்று மேற்குவங்க மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள டி.எம்.சி தலைவர்கள் கடந்த பத்து ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் குறித்து விவாதிக்க மற்றும் முன்னிலைப்படுத்தவும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் தெரு முனைக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த டி.எம்.சி தலைவர்கள் கட்சி கொடியை அதன் மாநில தலைமையகத்தில் ஏற்றி, மக்களுக்கு சேவை செய்வதில் அயராது உழைத்ததற்காக தொண்டர்களை வாழ்த்தினர்.

இதுகுறித்து கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தொண்டர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:

"திரிணமூல் இன்று 23 வயதாகும்போது, ​​ஜனவரி 1, 1998 அன்று நாம் தொடங்கிய பயணத்தை நான் திரும்பிப் பார்க்கிறேன். நமது ஆண்டுகள் பெரும் போராட்டத்தில் இருந்தன, ஆனால் இந்த நேரம் முழுவதும், ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே நாம் உறுதியாக இருக்கிறோம், அது நமது மக்கள்தான். நமது மக்களுக்கானப் போராட்டம் தொடரும், அதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.

பத்தாண்டு கால ஆட்சியை நாம் நிறைவு செய்துள்ள நிலையில் மாநிலத்தை மேலும் சிறந்த நிலைக்கு கொண்டுசெல்ல தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பேன்.

ஒவ்வொரு நாளும் மேற்கு வங்கத்தை சிறப்பாகவும் வலுவாகவும் மாற்றுவதில் நம்முடன் தொடர்ந்து போராடும் நமது மா-மதி-மனுஷ் (தாய்-தாய்நாடு-மக்கள்) மற்றும் நமது கட்சியின் அனைத்துத் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரிணமூல் குடும்பம் இந்த தீர்மானத்தை வரவிருக்கும் காலங்களிலும் தொடரும்! "

இவ்வாறு மம்தான பானர்ஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x