

காஷ்மீர் மாநிலத்தின் பரபரப்பான ஸ்ரீநகர் மார்க்கெட்டுக்குள் நேற்று மாலை நுழைந்த தீவிரவாதிகள் நகைக்கடை அதிபரை சுட்டுக்கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரின் பரபரப்பான சந்தைப் பகுதி சாராய் பாலா. இப்பகுதிக்குள் நேற்று மாலை துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத சில தீவிரவாதிகள் நுழைந்தனர்.
இதுகுறித்து ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வியாழக்கிழமை மாலை, நகரின் பரபரப்பான பகுதியான சாராய் பாலா மார்க்கெட்டில் நுழைந்த தீவிரவாதிகள் ஒரு நகைக்கடை உரிமையாளரை சுட்டுக் கொன்றனர்.
கடைவீதியின் பிரபல நகைக்கடையான நிசால் ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சத்பால் நிசால் வயது (62), குண்டடிப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார்.
தீவிரவாதிகள் நகைக்கடை அதிபரை ஏன் குறிவைத்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. போலீசார் இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இடத்தை அடைந்து சம்பவம் குறித்து அறிந்தனர். மேலும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஸ்ரீநகர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.