Last Updated : 30 Dec, 2020 03:16 AM

 

Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM

ஒவைசி கட்சியால் வாக்குகள் பிரிவதை தடுக்க தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகளை ஒன்று திரட்டும் காங்.

தமிழக தேர்தலில் போட்டியிட அசாதுதீன் ஒவைசி தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகளை ஓரணியில் இணைக்கும் முயற்சியில் காங் கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.

ஹைதராபாத் எம்.பி. அசாது தீன் ஒவைசியின் அகில இந்திய இத்தஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி சமீபத்தில் நடந்த பிஹார் தேர்தலில் போட்டியிட்டது. இக்கட்சி முஸ்லிம் வாக்குகளை பிரித்து, லாலு தலைமையிலான மெகா கூட்டணியின் வெற்றியை தடுத்துவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அடுத்து தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் போட்டியிடப் போவதாக ஒவைசி கட்சி அறிவித்துள்ளது. இதனால் முஸ்லிம் வாக்குகள் பிரிவதை தடுப்பதற்கு, முஸ்ஸிம் கட்சிகளை ஒன்றிணைக் கும்படி இரண்டு மாநில காங் கிரஸாருக்கு அதன் தேசியத் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸ் தேசிய நிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும் போது, “சுதந்திரப் போராட்டத்தில் இந்து-முஸ்லிம்கள் இணைந்து போராடியதால்தான் வெற்றி கிடைத்தது. ஆங்கிலேயரைப் போல தற்போது பிரித்தாளும் உத்தியை கடைப்பிடிக்கும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வெல்ல இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவசியம். இதை தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்துமுஸ்லிம்கள் இடையே வலியுறுத் தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் சிலர் கட்சி மேலிட உத்தரவை செயல்படுத்தும் பணியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்துமுஸ்லிகள் நடத்திய போராட்டத்திலும் பங்கு கொண்ட இவர்கள், தமிழகத்தின் திருநெல்வேலி, மதுரை, சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். இக்கூட்டங்களில் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் இரண்டு முக்கியமுஸ்லிம் கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அகில இந்திய முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியைத் தொடர்ந்து, எஸ்டிபிஐ உள்ளிட்ட சில முஸ்லிம் கட்சிகள் திமுக கூட்டணியில் இணைய முயல்கின்றன. இந்தச் சூழலில் ஒவைசியின் கட்சியும் திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

ஆனால் இவை அனைத்தையும் தமது கூட்டணியில் சேர்ப்பதில் திமுகவுக்கு சிக்கல் உள்ளதாகக் கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினை எழும் என்பதுடன் திமுக இந்துக்களுக்கான கட்சிஅல்ல என பாஜக பிரச்சாரம் செய்து பலனடையும் வாய்ப்புகள்இருப்பதாகவும் சந்தேகிக்கப்படு கிறது. எனவே முஸ்லிம் கட்சிகள் அனைத்தையும் தன்னுடன் சேர்ப்பதில் திமுக நன்றாக யோசித்தே முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x