Published : 30 Dec 2020 03:16 AM
Last Updated : 30 Dec 2020 03:16 AM

பிரிட்டனில் இருந்து வந்த பயணிகளில் 114 பேருக்கு பாதிப்பு: 6 பேருக்கு உருமாறிய கரோனா உறுதி

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில் 114 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு உரு மாறிய புதிய வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ் பிரிட்டன், தென்னாப்ரிக்கா நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இது சாதாரண கரோனா தொற்றைவிட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது என மருத்துவர்கள் எச்சரித்ததால், இந்தியா உட்பட பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த நவம்பர் 25-ம் தேதி முதல் இம்மாதம் 23-ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து 33 ஆயிரம் பேர் இந்தியா வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் அந்தந்த மாநில அரசுகள் கரோனா பரிசோதனையை செய்து வருகிறது. இதில் தற்போது வரை 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் புதிய வகை கரோனா 6 பேருக்கு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள நிம்மன்ஸ் மருத்துவமனையில் 3 பேர், ஹைதராபாத் சிசிஎம்பி-யில் 2 பேர், பூனேவில் என்ஐவி-யில் ஒருவர் என மொத்தம் 6 பேருக்கு இந்த புதிய கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தனித்தனி அறைகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும், இவர்களுடன் பயணம் செய்த சக பயணிகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என இவர்கள் யார் யாருடன் தொடர்பு கொண்டனரோ அவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கும் தற்போது கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்று வரத் தொடங்கியுள்ளதால், மத்தியஅரசும் அந்தந்த மாநில அரசுகளுக்கு சில நிபந்தனைகளை விதிக்க அறிவுறுத்தியுள்ளது. தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கு விதிக்கலாம் எனக் கூறியுள்ளது. ஆனால், மாநிலங்களுக்கிடையே போக்குவரத்தை நிறுத்த வேண்டாமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

தெலங்கானாவில்..

தெலங்கானா மாநிலத்தில் தற்போது 2 பேருக்கு புதிய ரக கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், கடந்த 10-ம் தேதி பிரிட்டனிலிருந்து ஹைதராபாத் வந்த 49 வயதுள்ள வருக்கு புதிய கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக வாரங்கல் நகரைச் சேர்ந்த ஒருவருக்கும் புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 16-ம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இவருக்கு கடந்த 22-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. அப்போது முதல் இவர் வாரங்கலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஆனால், மீண்டும் இவருக்கு ரத்தம், சளி பரிசோதனை செய்ய சிசிஎம்பிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில்இவருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவருக்கும் தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x