Last Updated : 28 Dec, 2020 12:22 PM

 

Published : 28 Dec 2020 12:22 PM
Last Updated : 28 Dec 2020 12:22 PM

பிரிட்டனிலிருந்து தெலங்கானா திரும்பிய 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை: 184 பேர் தவறான முகவரி அளித்தனர்

பிரதிநிதித்துவப்படம்

ஹைதராபாத்

பிரிட்டனிலிருந்து தெலங்கானாவுக்கு வந்த 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் 184 பயணிகள் தவறான முகவரியை அளித்துள்ளார்கள் என்று தெலங்கானா சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கரோனா வைரஸில் புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன. இந்தியாவும் டிசம்பர் 31-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு விமானங்களை இயக்கத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து தெலங்கானாவுக்கு சமீபத்தில் வந்த 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களில் 184 பயணிகள் தவறான முகவரியை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், பிரிட்டனில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா வழியாக தெலங்கானாவுக்கு வந்த 93 பயணிகள் முகவரியை ஆய்வு செய்தபோதிலும் அந்த முகவரியில் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்களின் தொலைபேசி எண்ணும் தவறாக இருந்தது.

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து தெலங்கானாவுக்கு வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 21 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று முடிவுகள் தெரியவரும் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தெலங்கானா மாநில சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், “பிரிட்டனில் இருந்து சமீபத்தில் தெலங்கானாவுக்கு வந்த 279 பயணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதில் 184 பயணிகள் போலியான முகவரியையும், செல்போன் எண்ணும் கொடுத்துள்ளார்கள்.

கடந்த 9-ம் தேதியிலிருந்து 1,216 பயணிகள் பிரிட்டனிலிருந்து தெலங்கானாவுக்கு வந்துள்ளார்கள். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையம், அரசு மருத்துவமனையில் கோவிட் மையத்துக்குச் சென்ற பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

சமீபத்தில் பிரிட்டனில் இருந்து தெலங்கானா வந்த பயணிகள் தங்கள் விவரங்களை 040-24651119 எனும் தொலைபேசி எண் அல்லது, 91541 70960 எனும் வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x