கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 98 லட்சத்தை நெருங்குகிறது: 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் பாதிப்பு

படம் | ஏஎன்ஐ.
படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 98 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20 ஆயிரத்து 21 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 2 லட்சத்து 7 ஆயிரத்து 871 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 97 லட்சத்து 82 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.83 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 77 ஆயிரத்து 301 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.72 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 279 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.44 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 66 பேர், டெல்லியில் 23 பேர், மேற்கு வங்கத்தில் 29 பேர், கேரளாவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 16 கோடியே 88 லட்சத்து 18 ஆயிரத்து 54 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 7 லட்சத்து 15 ஆயிரத்து 397 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in