Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

கட்டாய மத மாற்ற தடை மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பிறகு உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:

கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க வகை செய்யும் மத சுதந்திர மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இது சட்டமான பிறகு நாட்டிலேயே மிகவும் கடுமையான சட்டமாக இருக்கும். திருமணத்தின் மூலமோ மிரட்டல் உள்ளிட்ட வேறு வகையிலோ ஒருவரை மதம் மாற்ற முயல்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

ஒருவரை மதம் மாற்றுவதற்காகவே திருமணம் செய்தது தெரியவந்தால், அந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கப்படும். மேலும் மதம் மாற விரும்புவோர் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்துக்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x