அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்

அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
Updated on
1 min read

அம்மா உணவகம் பாணியில் ரூ.1-க்கு உணவு வழங்க பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் ஏற்பாடு செய்துள்ளார். இவரது சமூகநல அமைப்பின் சார்பில் இந்த உணவகம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. மாநில அரசால் நடத்தப்படும் இவற்றில் மிகக்குறைவான விலையில் உணவு வழங்கப்படுகிறது. இதைப் பின்பற்றி பிற மாநிலங்களிலும் இதுபோன்ற உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் டெல்லியிலும் `ஜன் ரஸோய்’ என்ற பெயரில் நேற்று உணவகம் தொடங்கப்பட்டது.

கிழக்கு டெல்லி தொகுதி பாஜக எம்பியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், இந்த உணவகத்தை தனது தொகுதிவாசிகளுக்காக கைலாஷ் நகரில் திறந்து வைத்தார். இவர் நடத்தும் சமூகநலப் பொது அமைப்பான ‘கவுதம் பவுண்டேஷன்’ சார்பில் இந்த உணவகம் செயல்படும்.

இங்கு மதிய உணவு ரூ.1-க்கு வழங்கப்படுகிறது. 2 ரொட்டி, 2 வகை பொறியல், அரிசி சாதம், பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 வரை கிடைக்கும். உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இதில், சுத்தமான உணவளிப்பது முக்கியக் குறிக்கோளாகக் கொள்ளப்படுகிறது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கவுதம் கம்பீர் கூறும்போது, ``டெல்லியில் ஏழைகளுக்காக 100 மலிவுவிலை உணவகங்கள் திறக்கப்படும் என முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார். ஆனால், இன்றுவரை ஒரு உணவகத்தைக்கூட அவர் திறக்கவில்லை. மேலும் சில உணவகங்களை வரும் நாட்களில் தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in