Published : 24 Dec 2020 07:44 AM
Last Updated : 24 Dec 2020 07:44 AM

ஐந்து திரைப்பட ஊடகப் பிரிவுகளை இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

திரைப்படப் பிரிவு, திரைப்படத் திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசிய திரைப்படக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் ஆண்டுக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால், உலகளவில் மிகப் பெரிய சினிமா தயாரிப்பு நாடாக இந்தியா உள்ளது. இந்த சினிமாத்துறை தனியார் துறையால் வழிநடத்தப்படுகிறது. சினிமாத்துறைக்கு உதவும் உறுதியை நிறைவேற்றுவதற்காக திரைப்படப்பிரிவு, திரைப்படத்திருவிழா இயக்குநரகம், இந்தியாவின் தேசியத் திரைப்படக் காப்பகம், இந்தியக் குழந்தைகள் திரைப்படச் சங்கம் ஆகியவற்றை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்துடன் இணைக்க பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இந்த இணைப்பின் மூலம் திரைப்பட ஊடகப் பிரிவுகள் அனைத்தும் ஒரு நிறுவனத்தின் தலைமையில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து திறம்பட மேற்கொள்ளும்.

மேலும் இந்த இணைப்புக்கு உதவ பரிவர்த்தனை ஆலோசகர் மற்றும் சட்ட ஆலோசகர் நியமனத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சினிமா ஊடக நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் ஊழியர்களை மாற்றுவது, இணைப்பின் அனைத்து செயல்பாட்டு அம்சங்களையும் மேற்பார்வையிடுவது போன்றவற்றை பரிவர்த்தனை ஆலோசகரும், சட்ட ஆலோசகரும் வழங்குவர்.

இந்த இணைப்பின் போது, சம்பந்தப்பட்ட ஊடக நிறுவன ஊழியர்கள் நலன்கள் முழுவதும் பாதுகாக்கப்படும். எந்த ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்.

திரைப்பட ஊடகப் பிரிவுகள் அனைத்தும் இணைக்கப்பட்ட தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தொலைநோக்கு, இந்திய சினிமாவின் வளர்ச்சியை ஊக்கவிப்பதாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x