Published : 24 Dec 2020 07:22 AM
Last Updated : 24 Dec 2020 07:22 AM

வாஜ்பாய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை 9 கோடி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார் மோடி: ரூ.18,000 கோடி நிதியுதவி விடுவிக்கிறார்

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி நாளை (டிச. 25) 9 கோடி விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்துரையாட உள்ளார். பிரதமர் கிசான் திட்டத்திலிருந்து அடுத்தகட்டமாக ரூ.18,000 கோடி நிதியுதவியை அவர் விவசாயிகளுக்கு விடுவிக்க உள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 4 வாரங்களாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. புதிய சட்டங்களில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முன்வந்தபோதிலும் விவசாயிகள் அதை ஏற்வில்லை. 3 சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளான வரும் 25-ம் தேதி நாட்டின் 9 கோடி விவசாயிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக சந்திக்கிறார்.

இதில் 6 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். மத்திய அரசு நலத்திட்டங்களால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பிரதமருடன் இந்த விவசாயிகள் பகிர்ந்து கொள்ள உள்ளனர். பிரதமர் கிசான் திட்டத்திலிருந்து அடுத்தகட்டமாக 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.18,000 கோடி நிதியுதவியை பிரதமர் விடுவிக்க உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தேசிய அளவில் 700 மாவட்டங்களில் மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே பிரதமரின் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

விவசாயிகளுக்கு வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் எழுதியுள்ள திறந்த மடலை பாஜகவினர் வினியோகிக்க உள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “விவசாய சகோதர, சகோதரிகளுக்கு கடிதம் வாயிலாக நரேந்திர தோமர் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். பண்பட்ட ஒரு பேச்சுவார்த்தைக்கு அவர் முயற்சி செய்கிறார். இதை அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x