Published : 23 Dec 2020 04:24 PM
Last Updated : 23 Dec 2020 04:24 PM

கரோனா; நாட்டின் மொத்த பாதிப்பில் 10 மாநிலங்களில் 77.34 சதவீதம் பாதிப்பு

இந்தியாவில் கரோனா பாதிப்பு 2.89 லட்சம் என்ற எண்ணிக்கையில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு அண்மைக் காலங்களில் குறைந்து வரும் நிலையில், தற்போது 2,89,240 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் மொத்த பாதிப்பில் இது 2.86 சதவீதமாகும். இதைத் தொடர்ந்து, 26 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு எண்ணிக்கை 10,000-க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

புதிய பாதிப்பை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 23,950 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 26,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவின் மொத்தப் பரிசோதனை எண்ணிக்கை 16.5 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது (16,42,68,721). நாளொன்றில் ஒரு மில்லியன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் முயற்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,98,164 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளில் மேற்கொள்ளும் பரிசோதனையின் திறன் 15 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதேபோல் நாட்டில் உள்ள பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 2,276 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களில் 1,19,035 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு மில்லியன் மக்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையின் எண்ணிக்கை தேசிய அளவை விடக் கூடுதலாக உள்ளது. இதே போல் 16 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ஒரு வாரத்தின் பாதிப்பு தேசிய அளவைவிடக் குறைவாகப் பதிவாகியுள்ளது.

நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96,63,382 ஆக (95.69%) பதிவாகியுள்ளது. குணமடைந்தவர்களில் 75.87 சதவீதத்தினர், 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

நாட்டின் மொத்த பாதிப்பில் 77.34 சதவீதம், 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 75.38 சதவீதத்தினர், 10 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x