Published : 23 Dec 2020 03:16 AM
Last Updated : 23 Dec 2020 03:16 AM
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவுக்கு சென்றவர் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். செய்திகள் வெளியான நிலையில், அந்த தேர்வை காங்கிரஸ் ரத்து செய்தது.
காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மார்ச் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அப்போது அவரது ஆதரவாளரான ஹர்ஷித் சிங்காயும் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மத்திய பிரதேசத்தில் இளைஞர் காங்கிரஸ் பொறுப்புகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துபுதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் ஜபல்பூரின் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவிக்கு ஹர்ஷித் சிங்காய் 12 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்துச் செய்திகள் வந்தபோது ஹர்ஷித் சிங்காய் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஹர்ஷித் சிங்காய் கூறும்போது, ‘‘காங்கிரஸில் இருந்து மார்ச் மாதமே நான் விலகிவிட்டேன். இப்போது இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரியது. 3 ஆண்டுகளுக்கு முன் நான் மனு செய்திருந்தேன். காங்கிரஸில் இருந்து விலகியபின் எனது மனுவை ரத்து செய்யுமாறு மாநில காங்கிரஸிடம் கோரினேன்.காங்கிரஸில் தேர்தல் இப்படித்தான் நடக்கிறது’’ என்றார்.
இந்த விவகாரம் வெளியில் தெரிந்தவுடன் ஹர்ஷித் சிங்காயின் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இருந்தாலும் ம.பி. காங்கிரஸின் செயல்பாடு குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் குணால் சவுத்ரி கூறும்போது, ‘‘ஹர்ஷித் சிங்காய் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை. காங்கிரஸ் பெயரைக் கெடுக்க மலிவான அரசியல் செய்கிறார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT