Last Updated : 22 Dec, 2020 05:09 PM

 

Published : 22 Dec 2020 05:09 PM
Last Updated : 22 Dec 2020 05:09 PM

‘‘அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி; அனைத்து மதங்களின் அடிப்படை மந்திரம்’’-  அலிகர் முஸ்லிம் பல்கலைகழக விழாவில் பிரதமர் மோடி பேச்சு

அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி எனும் கொள்கைதான் அனைத்து மதங்களின் அடிப்படை மந்திரமாக உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். இதில் அப்பல்கலைகழகத்தின் பல வருடக் கோரிக்கையான சிறுபான்மை அந்தஸ்து விவகாரத்தை தவிர்த்தவர் முத்தலாக் பற்றிக் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேசம் அலிகர் நகரின் பழம்பெரும் மத்தியப் பல்கலைழகம் அமைந்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

கரோனா பரவல் காரணமாக இதற்கான விழா இணையதளம் வழியாக நடைபெற்றது.

இதில், பிரதமர் நரேந்தர மோடி முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் சிறுபான்மை அந்தஸ்து அப்பல்கலைழகத்திற்கு அளிப்பதன் மீதும் குறிப்பிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரதமர் மோடி அதை பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தினர் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் பலவும் கடுமையாக எதிர்த்து வந்த, முத்தலாக் பற்றி அவர் குறிப்பிட்டு பேசினார்.

தனது உரையில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மாணவர்கள் தம் வளாகத்தில் ‘ஒரே இந்தியா, உன்னதமான இந்தியா’ எனும் குறிக்கோளை நாளுக்கு நாள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தற்போது நாடு செல்லும் பாதையில் மதரீதியாகவும் எந்த பாகுபாடுகளும் இன்றி அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைகின்றன. தேசநலனின் வளர்ச்சிக்கானக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் நம் தனிப்பட்ட கொள்கைகளை விலக்கி வைக்க வேண்டும்.

‘அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி’ எனும் கொள்கைதான் அனைத்து மதங்களின் அடிப்படை மந்திரமாக உள்ளது. இந்த உறுதி நம் நாட்டின் கொள்கைகளிலும் எதிரொலிக்கிறது.

முஸ்லிம் சமூகத்தில் இருந்த முத்தலாக் முறையும் முடிவிற்கு வந்துள்ளது. முஸ்லிம் பெண்கள் பாதியிலேயே கல்வியை விட்டு விடும் சதகிதமும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். பல்கலைழக துணைவேந்தர் பேரசியர் தாரீக் மன்சூருடன், வேந்தரான சைதனா முப்தல் சைபுத்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x