இந்தியாவில் கரோனா பாதிப்பு; 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்தது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24 மணிநேரத்தில் 20 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியி்ட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,556 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,00,75,116 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 96,36,487 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 30,376 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 95.53 ஆக உள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,92,518 ஆகக் குறைந்துள்ளது. கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 301 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,46,111 ஆக அதிகரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 16,31,70,557 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10,72,228 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in