Last Updated : 21 Dec, 2020 04:42 PM

 

Published : 21 Dec 2020 04:42 PM
Last Updated : 21 Dec 2020 04:42 PM

ஹாத்ரஸ் கூட்டுப் பலாத்கார கொலை வழக்கில் உ.பி. அரசு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது: அகிலேஷ் யாதவ்

ஹாத்ரஸ் கூட்டு பலாத்காரக் கொலை வழக்கில் உ.பி. அரசு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்காக நீதி கேட்டு போராட்டங்களும் நடைபெற்றன. இதனை அடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் தடயவியல் சோதனை மேற்கொண்டதில் கூட்டு பலாத்காரத்துக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் 19 வயதுப் பெண்ணைக் கூட்டு பலாத்காரம் செய்துள்ளதற்கான சில ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ள அகிலேஷ் யாதவ் கூறியதாவது:

"ஹாத்ரஸ் சம்பவத்தில் பாஜக அரசின் பொய்கள் அம்பலப்படுத்தப்படுள்ளன. இந்த விதத்தில், உ.பி. அரசின் தவறான வழக்குகள் ஒவ்வொன்றாக அம்பலப்படுத்தப்படும் செயல்முறை தொடங்கியுள்ளது. நீதித்துறை மற்றும் ஜனநாயகம் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். அவ்வகையில் அசாம் கான் மீதான பொய்யான வழக்குகளிலும் அரசாங்கத்திற்குத் தோல்வி ஏற்படும். அவருக்கு விரைவில் நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.''

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சியின் ராம்பூர் மக்களவை எம்.பி.யான அசாம் கான், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தனது மகன் அப்துல்லா தயாரித்த போலி பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில் ராம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் தற்போது சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்குச் சொந்தமான முகமது அலி ஜவஹர் பல்கலைக்கழகத்தைச் சுற்றி நிலங்களை ஆக்கிரமித்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட நிலையில் அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x