Last Updated : 20 Dec, 2020 02:36 PM

 

Published : 20 Dec 2020 02:36 PM
Last Updated : 20 Dec 2020 02:36 PM

லாலுவுக்கு உடல்நலக் குறைவு: சிறுநீரகம் 25% மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல்  

கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெறுபவரது சிறுநீரகம் 25 சதவீதம் மட்டும் செயல்படுவதாக மருத்துவக் குழு தகவல் அளித்துள்ளது.

பிஹாரின் முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் நிறுவனர். ஜார்க்கண்ட் மாநில சிறைக் கைதியான இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாதங்களாக ராஞ்சியின் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனால், லாலுவைக் காண அவரது மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் இன்று நேரில் விரைந்துள்ளார்.

இது குறித்து பிஹாரின் முன்னாள் துணை முதலவரான தேஜஸ்வீ கூறும்போது, ''தந்தையின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதால் அவரை 5 மாதங்களுக்குப் பிறகு பார்க்க வந்துள்ளோம். இங்கு மருத்துவர்கள் அளித்த அறிக்கையை டெல்லியில் சிறுநீரக நிபுணர்கள் மற்றும் எங்கள் குடும்ப மருத்துவர்களுக்கும் அனுப்பி தீவிர சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் முடிந்த பிஹார் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக தேஜஸ்வீ தன் தந்தையைக் காண வந்துள்ளார். இவர் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியை எதிர்த்து மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.

பிஹாரில் சுமார் 15 வருடங்கள் நடைபெற்ற ஆர்ஜேடி ஆட்சியின் கால்நடை தீவன வழக்கில் லாலு முக்கியக் குற்றவாளி. இவரது மேல்முறையீடு வழக்கு நடைபெறும் நிலையில், சிபிஐ நீதிமன்றத்தில் அவரது ஜாமீன் மனு விசாரணை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x